pawan kalyan web
இந்தியா

“பாவம் செஞ்சிட்டாங்க; ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்கபோறேன்”- பரிகார விரதம் தொடங்கிய பவன் கல்யாண்!

PT WEB

செய்தியாளர்- B.R.Naresh

“திருப்பதி லட்டு கலப்படம் குறித்து அமைச்சரவையிலும், சட்டசபையிலும் விவாதிக்க வேண்டும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் மற்றும் தேவஸ்தானத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என பவன் கல்யாண் கூறியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாத நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்டு இன்று முதல் 11 நாட்கள் பரிகார விரதத்தை தொடங்கியுள்ளார் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண். ஆந்திர மாநிலம், குண்டூரில் உள்ள தசாவதார வெங்கடேஸ்வர சாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து பவன் கல்யாண் தனது விரதத்தை தொடங்கினார்.

ராமர் கோயிலுக்கும் கலப்படமான லட்டுகள் அனுப்பப்பட்டன..

பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பவன் கல்யாண், “அரசுகளை குறை சொல்லவோ, அரசியல் ஆதாயத்துக்காகவோ நான் இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் கோயில்களில் பூஜை நடைமுறைகளை மாற்றிவிட்டனர். ஸ்ரீ வாணி அறக்கட்டளையின் பெயரில் டிக்கெட் ரூ.10,000-த்துக்கு விற்கப்பட்டது. அவர்கள் ஆட்சியில் மாநிலம் முழுவதும் பல கோயில்கள் இடிக்கப்பட்டும், தேருக்கு தீ வைத்து எரிக்கப்பட்டும் உள்ளன. இப்படி சுமார் 300 கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

எந்த மதமாக இருந்தாலும்... எந்த வழிபாட்டுத் தலமாக இருந்தாலும்... அதன் மத உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது. கோவில் பிரசாதத்தில் கலப்படம் இருக்கிறது, தரம் சரியில்லை என்று முன்பே கூறி வந்தோம். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பல நூற்றாண்டுகளாக இருக்கும் பிரசாதம் விநியோக முறையில் இந்த அளவில் கலப்படம் நடந்திருக்குமென்று நான் நினைக்கவே இல்லை.

பல ஆண்டுகளாக போராடி அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவிற்கும் கலப்படம் செய்யப்பட்ட லட்சம் லட்டுகள் அனுப்பப்பட்டது மிகவும் கொடுமை. அரசியல் ஆதாயத்துக்காக இதை இவ்வாறு கூறுவதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள்.

பவன் கல்யாண்

உங்கள் ஆட்சியில் ராமர் சிலை உடைக்கப்படும் போதும் நான் சாலையில் இறங்கி போராடினேன். மத வழிபாட்டு தளத்தில் கோயில், சர்ச், மசூதி என எங்கிருந்தாலும் தாக்குதல்கள் நடக்கும் போது வேடிக்கை பார்க்க கூடாது. தர்மத்தை கெடுக்க யாருக்கும் உரிமை இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மத வழிபாட்டு முறையை கடைப்பிடிப்பது அவர்கள் ஜனநாயக உரிமை. இதில் யாரும் தலையிட முடியாது. அந்தந்த மத உணர்வுகளுக்கும் கலாசாரத்திற்கும் மதிப்பளித்து கௌரவத்துடன் செயல்பட வேண்டும்.

பாவம் செய்துவிட்டார்கள்.. நான் மன்னிப்பு கேட்கப்போகிறேன்!

பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டதாக நாங்கள் அப்போது கூறியபோது, அறங்காவலர் குழுவில் இருந்த ஒய்.வி.சுப்பாரெட்டியும், தர்மா ரெட்டியும் இருந்த வாரியம் என்ன செய்தது..? இப்போதும் கூட தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என கூறாமல், அரசியல் செய்வதாக எங்கள் மீது குற்றம் சாட்டுகிறீர்கள்.

சர்ச், மசூதியில் எதவாது நடந்தால் உலகமே விவாதிக்க கூடிய நிலையில், இந்துக்களுக்கு என்றால் அமைதியாக இருக்க வேண்டுமா?. இந்து மதத்திற்கும் எதாவது நடந்தால் குரல் கொடுக்க வேண்டும், அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். எந்த மதத்திற்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் உணர்வுகளை புண்படுத்தினால் வேடிக்கை பார்க்க முடியாது.

பவன் கல்யாண்

சனாதன தர்மம் யாரோ ஒருவரால் தொடங்கப்பட்டது அல்ல. நம் நாட்டில் அனைத்து மதங்களும் ஒன்றிணைந்த களம் அவற்றை கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பிரசாதத்தில் கலப்படம் செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். திருமலை லட்டு கலப்பட விவகாரத்தை அமைச்சரவையிலும், சட்டசபையிலும் விவாதிக்க வேண்டும். சிபிஐ விசாரணைக்கு வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுக்க வேண்டும். குறைந்த விலையில் நெய் தருவதாக கூறிய இடைத்தரகர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

பவன் கல்யாண்

சுவாமி பிரசாதத்தில் கலப்படம் இருந்தால் தேவஸ்தானத்தில் பணியில் இருந்த அதிகாரிகளும், நிர்வாக குழு உறுப்பினர்களும் பேசாதது ஏன்..? ஊழியர்கள் மெத்தனமாக இருந்து பெரும் பாவம் செய்து விட்டனர். இந்த பாவத்திற்கெல்லாம் நான் துணை இல்லாவிட்டாலும், இவ்வாறு நடந்ததற்கு ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைக்கிறேன். அதற்காக 11 நாள் தீட்சை விரதத்தை இன்று தொடங்கியுள்ளேன்” என துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்தார்.