இந்தியா

சிறையில் இருந்து வெளியே வந்த ப.சிதம்பரம், சோனியா காந்தியுடன் சந்திப்பு

சிறையில் இருந்து வெளியே வந்த ப.சிதம்பரம், சோனியா காந்தியுடன் சந்திப்பு

webteam

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் 106 நாள் சிறைவாசத்திற்கு பின்னர் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி முன்னாள் நிதி‌ அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. திகார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி சிபிஐ தொடர்ந்த முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் அதற்கு முன்பாகவே, அதாவது அக்டோபர் 16ஆம் தேதி இதே வழக்கில் அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்தது. இதனால் அவர் சிறையிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கிலும் ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 

இந்நிலையில் 106 நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு இன்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வெளியே வந்தார். சிறையில் வெளிவந்த ப.சிதம்பரம் தனது மகன் கார்த்தி சிதம்பரத்துடன் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்திக்க சென்றுள்ளார். அவர்கள் இருவரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்திற்கு சென்றுள்ளனர். 

முன்னதாக இதுதொடர்பாக ராகுல் காந்தி, “ப. சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. ப.சிதம்பரத்தை 106 நாட்கள் சிறையில் வைத்தது பழிவாங்கும் நடவடிக்கை.  நியாயமான விசாரணை மூலம் குற்றமற்றவர் என்பதை ப. சிதம்பரம் நிரூபிப்பார் என்று நான் நம்புகிறேன்”  எனக் கூறியுள்ளார்.