இந்தியா

கொரோனாவுக்கு கண்டறியப்பட்ட 2 -டி.ஜி மருந்துகள் விநியோகம் அடுத்த வாரத்தில் தொடக்கம்

நிவேதா ஜெகராஜா

கொரோனா வைரஸை குணப்படுத்தும் மருந்துகளில் இப்போதைக்கு ரெம்டெசிவிர்தான் அதிகம் பேசுபொருளாக இருக்கிறது. ஆனால் ரெம்டெசிவிரைவிடவும் அதிக செயல்திறன் கொண்ட புதிய மருந்தை இந்திய மருத்துவர்கள் சில தினங்களுக்கு முன் கண்டுபிடித்திருந்தனர். 2- டி.ஜி. என்ற அந்த மருந்து, முதற்கட்டமாக விரைவில் 10,000 டோஸ் விநியோகிக்கப்படும் என அதை கண்டறிய உதவிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் கூறியுள்ளது.

அடுத்த வார தொடக்கத்தில் இந்த விநியோகம் தொடங்குமென அவர்கள் கூறியுள்ளனர். மேற்கொண்டு இதன் உற்பத்தியும் அதிகரிக்கப்படுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மருந்து கொரோனாவுக்கான சிறந்த மருந்தாக இருக்குமென்றும், இதனால் பல்லாயிரக்கணக்கானோர் காப்பாற்றப்படுவர் என்றும் கர்நாடக முதல்வர் நேற்றைய தினம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மருந்து நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை ஏற்படுவதை குறைக்கும் என்று இதை கண்டறிந்த மருத்துவர்கள் குறிப்பிட்டிருப்பதால், இந்தியாவில் இப்போது நிலவிவரும் ஆக்சிஜன் தட்டுப்பாடு சார்ந்த சிக்கல்களும் குறையுமென கணிக்கப்படுகிறது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் எனும் டிஆர்டிஓ ஆய்வகம் மற்றும் ஹைதராபாத்தில் இயங்கும் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) மருந்தின் பார்முலாவுடன் இந்த கோவிட் மருந்தினை உருவாக்கியது. இந்த மருந்து பொடி வடிவில் பாக்கெட்டுகளில் கிடைக்கும் என்றும்,  அதை தண்ணீரில் கரைத்து வாய்வழியாக எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மருந்துகளின் கட்டுப்பாட்டு மூலக்கூறுகொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவுகிறது மற்றும் ஆக்ஸிஜன் சார்புநிலையை குறைக்கிறது என்பதை மருத்துவ சோதனை முடிவுகள் காட்டிய பின்னர் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் (டி.சி.ஜி.ஐ) இம்மருந்துக்கு ஒப்புதல் அளித்திருந்தது.  இம்மருந்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகளில் நோயாளிகளிடம் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தவிர்க்க, 322.5 கோடி ரூபாய் மதிப்பில் 1,50,000 ஆக்சிகேர் அமைப்பு முறைகளைக் கொள்முதல் செய்ய பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணம் (பிஎம் கேர்ஸ்) அறக்கட்டளை நிதி ஒதுக்கியுள்ளது. இதன்மூலம், எஸ்பிஓ2 எனப்படும் உடலின் ரத்த பிராணவாயு செறிவூட்டல் அளவுகளின் அடிப்படையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படலாம்.

இது ஆக்சிஜனைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ உருவாக்கிய விரிவான அமைப்பு முறையாகும். இந்தியாவில் உள்ள பலதரப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு இந்தத் தொழில்நுட்பத்தை டிஆர்டிஓ உரிமை மாற்றம் செய்துள்ளதால் நாடு முழுவதும் ஆக்சிகேர் அமைப்புமுறையை இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும். அதனால் ஆக்சிஜன் விநியோகம் அதிகரிக்கும்.