இந்தியா

அதானி மருத்துவமனையில் ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பு - குஜராத் அரசு

webteam

குட்ச் மாவட்டத்தில் உள்ள அதானி அறக்கட்டளைக்கு சொந்தமான மருத்துவமனையில் கடந்த 5 வருடத்தில் ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக சட்டப்பேரவையில் குஜராத் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் குட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் நகரில் அதானி அறக்கட்டளைக்கு சொந்தமான ஜிகே பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் எத்தனை குழந்தைகள் இறந்துள்ளன என்பது தொடர்பாக சட்டப்பேரவையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சந்தோக்பென் அரெதியா கேள்வியெழுப்பினார். 

இதற்கு பதிலளித்த குஜராத் துணை முதலமைச்சர் நிதின் படேல், கடந்த 5 ஆண்டுகளில் அதானி அறக்கட்டளைக்கு சொந்தமான ஜி.கே. பொது மருத்துவமனையில் 1,018 குழந்தைகள் இறந்துள்ளதாக தகவல் தெரிவித்தார்.

அப்போது “ 188 குழந்தைகள் 2014-15ஆம் ஆண்டிலும் 187 குழந்தைகள் 2015-16 ஆம் ஆண்டிலும், 208 குழந்தைகள் 2016-17ஆம் ஆண்டிலும், 276 குழந்தைகள் 2017-18ஆம் ஆண்டிலும், 159 குழந்தைகள் 2018-19ஆம் ஆண்டிலும் அதானி அறக்கட்டளைக்கு சொந்தமான ஜிகே பொது மருத்துவமனையில் பல்வேறு நோய்கள் காரணமாக இறந்துள்ளன” எனக் குறிப்பிட்டார். 

மேலும், குழந்தைகளின் மரணத்துக்கான காரணத்தை அறிய கடந்த ஆண்டு மே மாதம் குழு அமைக்கப்பட்டதாகவும் குறைப்பிரவசம், தொற்றுநோய்கள் மற்றும் சுவாசக்கோளாறுகள், சீழ் கட்டிகள் போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

உரிய நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலின்படியே ஜி.கே. மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுவதாகவும் நிதின் படேல் குறிப்பிட்டார்.