காலணியால் அடிப்போம் போராட்டம் pt web
இந்தியா

மும்பை | சிவாஜி சிலை உடைந்த விவகாரம்.. எதிர்க்கட்சிகள் முன்னெடுத்த ‘காலணியால் அடிப்போம்’ போராட்டம்!

PT WEB

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் அனல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சிந்து துர்க் (SINDH DURG) மாவட்டத்தில் இருந்த சிவாஜி சிலை கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக உடைந்து விழுந்தது.

இதையடுத்து மகாராஷ்டிர மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கோரினார். எனினும் சிலை உடைந்த விவகாரத்தில் அரசை கண்டித்து காங்கிரஸ், சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு, தேசியவாத காங்கிரஸ் பவார் பிரிவு ஆகிய கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் கூட்டணியான மகா விகாஸ் அகாதி சார்பில் மும்பையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. சரத் பவார், உத்தவ் தாக்கரே, சஞ்சய் ரவுத், நானா படோல் போன்ற முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய சரத் பவார், சிவாஜி சிலை உடைந்தது மகாராஷ்டிராவில் எந்தளவுக்கு ஊழல் புரையோடியிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது என சாடினார். பிரதமர் மன்னிப்பு கோரிய விதம் ஆணவ தொனியில் இருந்ததாக உத்தவ் தாக்கரே விமர்சித்தார். காலணியால் அடிப்போம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் பங்கேற்ற பலர் பெரிய அளவிலான காலணிகளை கொண்டு வந்தனர்.

இந்த போராட்டம் அரசியல் ரீதியானது என விமர்சித்த துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ், நேரு கூட தனது டிஸ்கவரி ஆஃப் இந்தியா புத்தகத்தில் சிவாஜியை அவமதித்தார் என்றும் அதற்காக காங்கிரசார் மன்னிப்பு கேட்பார்களா என்றும் வினவினார். எதிர்க்கட்சிகளை கண்டித்து பாஜகவினரும் பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.