இந்தியா

புனே: மாஸ்க் அணியாதவர்களிடமிருந்து ஒரு மாதத்தில் ஒரு கோடி ரூபாய் வசூல்

EllusamyKarthik

கொரோனா தொற்றை தடுக்க பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், முகக்கவசம் அணிவதும் அவசியம் என அறிவுறுத்தியது உலக பொது சுகாதார மையம். அதனை இந்தியா உட்பட அனைத்து உலக நாடுகளும் விதியாகவே அறிவித்து மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.

இருப்பினும் சிலர் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருவதை தடுக்கும் வகையில் அப்படி செய்பவர்களிடம் இந்தியாவில் அபராதம் வசூலிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த அபராத முறை பின்பற்றப்பட்டு வரும் சூழலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புனேவில் பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்கள் மற்றும் எச்சில் துப்பியவர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது புனே மாவட்ட நிர்வாகம். 

புனே மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தேஷ்முக்கின் ஆணைக்கு இணங்க போலீசார் கொள்ளை நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசின் அறிவுறுத்தலை கடைபிடிக்காதவர்களிடமிருந்து அபராத தொகையை வசூலித்துள்ளனர். 

ஹவேலி மற்றும் இந்தாபூர் பகுதியில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் தான் அதிகளவில் அரசின் விதியை பின்பற்றாதமைக்காக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.