இந்தியா

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு?

webteam

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சியின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அப்போது இடைக்கால சபாநாயகராக மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.பி வீரேந்திரகுமார் பதவியேற்றார். 

அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி உள்ளிட்டோர் என மொத்தம் 313 எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் இன்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். 

17ஆவது மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா போட்டியிடுகிறார். பாஜகவிற்கு மக்களவையில் பெரும்பான்மை உள்ளதால் ஓம் பிர்லா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவது எந்தச் சிக்கலும் இருக்காது என பாஜக தலைவர்கள் கருதுகின்றனர். 

இந்நிலையில் பாஜகவின் ஓம் பிர்லாவிற்கு ஆதரவாக பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளும் கூட்டணியில் இல்லாத கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாஜகவின் கூட்டணியிலுள்ள அதிமுக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர். அத்துடன் ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட 10 கட்சிகளும் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.  இதுவரை மக்களவைக்கு ஓம் பிர்லா இரண்டு முறை தேர்வாகியுள்ளார். இம்முறை இவர் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா-பண்டி மக்களவைத் தொகுதியிலிருந்து எம்பியாக தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.