இந்தியா

புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரசும் ஆதரவு !

webteam

மக்களவையின் சபாநாயகராக இன்று ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகளும் ‌ஆதரவு‌.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சியின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நேற்று முந்தினம் தொடங்கியது. அப்போது இடைக்கால சபாநாயகராக மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.பி வீரேந்திரகுமார் பதவியேற்றார்.   அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி உள்ளிட்டோர் என மொத்தம் 313 எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் நேற்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். 

இந்நிலையில் 17ஆவது மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா போட்டியிடுகிறார். பாஜகவிற்கு மக்களவையில் பெரும்பான்மை உள்ளதால் ஓம் பிர்லா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என பாஜக தலைவர்கள் கருதுகின்றனர். 

இந்தச் சூழலில் பாஜகவின் ஓம் பிர்லாவிற்கு ஆதரவாக பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் மட்டும் இல்லாமல் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட 10 கட்சிகளும் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். இதனால் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.