இந்தியா

முதியோர் பணம் பெறுவதற்காக 100 வயது தாயைக் கட்டிலில் வைத்து இழுத்து வந்த மகள்

webteam

வங்கியிலிருந்து பணத்தைப் பெறுவதற்காக 100வயது மூதாட்டியைக் கட்டிலில் வைத்து பெண் ஒருவர் வங்கிக்கு இழுத்துச் சென்ற சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.

முதியவர்களுக்கு மத்திய அரசு அறிவித்த கொரோனா உதவித்தொகையை வாங்குவதற்காக தன்னுடைய 100 வயது அம்மாவைக் கட்டிலில் வைத்து வங்கிக்கு இழுத்துச்சென்றுள்ளார் 60 வயதான மகள் புஞ்சிமாட்டி தேவி. ஒடிசாவின் நபாரா மாவட்டத்தின் பர்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் புஞ்சிமாட்டி. இவரது தாய்க்கு மத்திய அரசு அறிவித்த கொரோனா உதவித்தொகை வந்துள்ளது.

இது தொடர்பாகத் தெரிவித்துள்ள கிராமத்தினர், முதியவர் உதவித்தொகைக்காக உத்கல் கிராமின் வங்கிக்குச் சென்றார் புஞ்சிமாட்டி. ஆனால் சம்பந்தப்பட்ட நபர் நேரில் வந்தால் தான் பணம் வங்கிக் கணக்கிற்குச் செலுத்தப்படும் என வங்கி மேலாளர் கூறியுள்ளார். அதனால் தன்னுடைய தாயைக் கட்டிலில் வைத்து புஞ்சிமாட்டி இழுத்துச்சென்றார் எனத் தெரிவித்தனர்.

இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது. இந்தச் சம்பவம் குறித்துத் தெரிவித்த அம்மாவட்ட ஆட்சியர், முதியவர்களால் வர முடியவில்லை என்றால் வங்கி மேலாளர் நேரடியாக வீட்டிற்குச் செல்வார். ஆனால் அன்றைய தினம் வேலைப்பளு காரணமாக வங்கி மேலாளர் அடுத்த நாள் வருவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அந்தப் பெண் அன்றைய தினமே தன்னுடைய தாயைக் கட்டிலில் வைத்து இழுத்துச் சென்றுள்ளார்.