இந்தியா

தீயை அணைக்க நெருப்பில் குதித்த போலீஸ் அதிகாரி - தி வைரல் மேன் அகிலேஷ்

webteam

உத்திரப்பிரதேசத்தில் இன்றைய தினத்தின் ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருகிறார் போலீஸ் அதிகாரி அகிலேஷ் குமார் தீக்சித்.

சமூக வலைத்தளங்களில் அகிலேஷ் குமாரின் புகைப்படங்களை பகிர்ந்து பலரும் பாராட்டி வருகின்றனர். அப்படி என்ன செய்துவிட்டார் அகிலேஷ்?

உத்திரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அலம்கானி பகுதியில் கீதா- புல்சிங் தம்பதியருக்கு சொந்தமான வீடு திடீரென்று தீப்பிடித்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட கீதா - புல்சிங் தம்பதி தீயணைப்புத்துறைக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்துவிட்டு அண்டை வீட்டார் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். 

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த எஸ்ஐ அகிலேஷ் குமார் தீக்சித், தீயை அணைக்க துரித நடவடிக்கையை எடுத்துள்ளார். அப்போது எரியும் வீட்டுக்குள் இரண்டு கேஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர் இருப்பதாகவும் இது எரியும் தீயை இன்னும் தீவிரப்படுத்தும் என்றும் புல்சிங் தெரிவித்துள்ளார். 

உடனடியாக அருகில் உள்ள வீட்டில் இரண்டு போர்வைகளை வாங்கிய அகிலேஷ் குமார், போர்வையை தன் மேல் சுற்றிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்துவிட்டார். அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோக கையில் சிலிண்டருடன் வெளியே வந்தார் அகிலேஷ் குமார். சிலிண்டரை வெளியே எடுத்துவிட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தன்னுடைய உயிரை பணயம் வைத்து மீட்புப்பணியில் ஈடுபட்ட அகிலேஷை அப்பகுதி மக்கள் மட்டுமின்றி நொய்டா காவல்துறையும் பாராட்டியுள்ளது.  

சிலிண்டரை எடுத்துக்கொண்டு அகிலேஷ்  நெருப்பில் இருந்து வெளியே வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.