இந்தியா

''3 மாதத்தில் ஒரு பெண் குழந்தைக்கூட பிறக்கவில்லை'' - அதிர்ச்சியில் ஆழ்த்திய உத்திரகாண்ட்

webteam

உத்திரகாண்டின் 132 கிராமங்களில் கடந்த 3 மாதத்தில் ஒரு பெண் குழந்தைக் கூட பிறக்கவில்லை என்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது கருக்கலைப்பு மற்றும் சிசுக்கொலையை வெட்டவெளிச்சமாக காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் பெண் குழந்தைகளுக்கு ஆதரவளித்து வருகிறது. இந்நிலையில் உத்திரகாண்டின் 132 கிராமங்களில் கடந்த 3 மாதத்தில் ஒரு பெண் குழந்தைக் கூட பிறக்கவில்லை என்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிகாரப்பூர்வமாக வெளியான தகவலின்படி 132 கிராமங்களில் கடந்த 3 மாதங்களில் மொத்தம் 216 குழந்தைகள் பிறந்ததாகவும் அதில் ஒன்றுகூட பெண் குழந்தை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் ஆஷிஷ், ''பெண் குழந்தை பிறக்காத கிராமத்தை கணக்கெடுத்து கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளோம். விரைவில் ஆய்வு செய்து உரிய காரணம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர் கல்பனா தாகூர்,  ''மூன்று மாதங்களாக 132 கிராமங்களில் ஒரு பெண் குழந்தைக் கூட பிறக்கவில்லை என்பது எதார்த்தமானது அல்ல. இந்தப்பகுதியில் கருக்கலைப்பு அல்லது பெண் சிசுக்கொலை நடந்துவருவதை இந்த புள்ளிவிவரம் வெட்டவெளிச்சமாக காட்டுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.