இந்தியா

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மீதமிருக்கும் 4 வாய்ப்புகள்...!

webteam

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகளுக்கு மீதமிருக்கும் வாய்ப்புகள் என்னவென்பதை தெரிந்துகொள்வோம்.

நாட்டையே அதிரச் செய்த நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு ஏற்கெனவே இரண்டு முறை தூக்கு தண்டனை தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் தனித்தனியே நீதிமன்றத்தில் மனு அளித்ததால், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் தள்ளிக் கொண்டே போனது. இதைத்தொடர்ந்து மார்ச் 3-ஆம் தேதி காலை 6 மணிக்குள் நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த முறையாவது கண்டிப்பாக குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏபி சிங் கூறும்போது, “இன்னும் நிறைய சட்டத்தீர்வுகள் நிலுவையில் உள்ளன. நாங்கள் எங்கள் சட்ட தீர்வுகளின் மூலம், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக முறையிடுவோம்” எனத் தெரிவித்தார். இந்த தீர்ப்புக்கு ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கொடுத்த அழுத்தமே காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் வினய் சர்மா, அக்ஷய் தாக்கூர், முகேஷ் சிங், பவன் குப்தா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க ஒருவருக்கு நான்கு என மொத்தம் 16 வாய்ப்புகள் இருந்தன. அதில் தற்போது மொத்தமாக நான்கு வாய்ப்புகள் மட்டுமே மீதமிருக்கின்றன.

முதலில், குற்றவாளி வினய் சர்மாவை எடுத்துக் கொண்டால், அவரது தூக்கு தண்டனைக்கு எதிரான சீராய்வு மனு, மறுசீராய்வு மனு ஆகியவை நிராகரிக்கப்பட்டுவி‌ட்டன. அவர் குடியரசுத் தலை‌வருக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்தது தொடர்பான மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிம‌ன்றம் நிராகரித்துவிட்டது. இதனால் அவருக்கு இருந்த நான்கு வாய்ப்புகளும் முடிந்துவிட்டன.

அதே போல், குற்றவாளி முகேஷ் சிங்கின் சீராய்வு மனு, மறு சீராய்வு மனு, குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட கருணை மனு ஆகியவை நிராகரிக்கப்பட்டுவிட்டன. அதைத் தொடர்ந்து கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதனால் முகேஷ் சிங்கிற்கு இருந்த அனைத்து வாய்ப்புகளும் முடிந்துவிட்டன.

குற்றவாளி அக்ஷய் தாக்கூரின் தூக்கு தண்டனைக்கு எதிரான சீராய்வு மனு, மறு சீராய்வு ம‌னு, குடியரசு தலைவரிடம் அளிக்கப்பட்ட கருணை மனு ஆகியவை நிராகரிக்கப்பட்டுவிட்டன. குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்தது தொடர்பாக உச்சநீதிம‌ன்றத்தில் மேல்முறையீடு செய்யும் ஒரு வாய்ப்பு மட்டும் அக்ஷய் தாக்கூருக்கு இருக்கிறது.

குற்றவாளி பவன் குப்தாவுக்கு மூன்று வாய்ப்புகள் இருக்கின்றன. தூக்கு தண்‌டனைக்‌கு எதிரான சீராய்வு மனு மட்டுமே அவரு‌க்கு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. மறு சீராய்வு மனு, குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளிக்கும் வாய்ப்பு, கருணை மனு நிராகரிக்கப்பட்டால், அதனை எதிர்த்து உச்ச‌நீதிமன்றத்‌தை அணுகும் வாய்ப்பு ஆகியவை பவன் குப்தாவுக்கு இருக்கிறது.