இந்தியா

கண்ணி வெடித்தாக்குதல் - 9 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

rajakannan

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 9 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 

மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்த சிறப்பு பயிற்சி பெற்ற கோப்ரா படை வீரர்கள் இன்று காலை முதலே என்கவுண்ட்டர் பணியில் ஈடுபட்டனர். கிஸ்தாராம் பகுதியில் வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது, மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தினர். இதில், சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனம் வெடித்துச் சிதறியது.

இந்தத் தாக்குதலில் 9 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 6 வீரர்கள் காயம் அடைந்தனர். அதில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. உடனடியாக மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டதுதான் இதற்கு முன்பான பெரிய தாக்குதல்.

இந்தச் சம்பவம் குறித்து நக்ஸல் எதிர்ப்பு சிறப்பு போலீஸ் அதிகாரி, அவஸ்தி கூறுகையில், “சிஆர்பிஎஃப் வாகனம் கிஸ்தாரம் பகுதியில் இருந்து பலோடி நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்றார்.