ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட குடும்பம் புதிய தலைமுறை
இந்தியா

மும்பை: விடுமுறையை கழிக்கச் சென்ற குடும்பத்திற்கு ஏற்பட்ட துயர சம்பவம் #ViralVideo

Jayashree A

மும்பையை அடுத்துள்ள புனேவைச் சேர்ந்த ஒரு குடும்பம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சோகம்.... சோகமான சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.

மும்பையை அடுத்துள்ள புனேவில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த ஐந்து பேர், ஞாயிற்றுக் கிழமையான நேற்று விடுமுறையை கழிக்க மும்பைக்கு அருகில் உள்ள லோனாவாலா மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை முதல் லோனாவாலாவில் மழை பெய்தபடி இருந்துள்ளது. இதைப் பொருட்படுத்தாமல் சுற்றுலா சென்ற குடும்பத்தினர் அப்பகுதிகளை சுற்றிப்பார்த்துவிட்டு, பிற்பகல் 12 மணி அளவில் அங்குள்ள புஷி அணைக்கு சென்றுள்ளனர்.அணையை பார்த்த பின், அணையின் பின்னால் இருந்த ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

ஆற்றுப்பகுதியில் ஆபத்தான பகுதி ஒன்றின் பாறைமேல் நின்றபடி புகைப்படம் எடுத்த நிலையில் திடீரென்று ஆற்றில் காட்டாற்று வெள்ளம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கரைபுரண்ட ஆற்றின் வெள்ளத்தால், மையப்பகுதியில் இருந்தவர்களுக்கு மீண்டும் கரை திரும்பமுடியவில்லை. அவர்களுக்கு மற்றவர்களின் உதவி தேவைப்பட்ட நிலையில், அங்கிருப்பவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர்.

கரையில் இருப்பவர்களும் அவர்களுக்கு தைரியம் அளித்து அவர்களை காப்பாற்ற பலரும் முயற்சித்தனர். இருப்பினும் முயற்சி பலனளிக்காமல் போகவே காட்டாற்று வெள்ளத்தில் அனைவரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் மூவரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இருவரின் உடலை தேடும் பணியில் சிவதுர்கா மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று 9 வயது சிறுமியில் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள ஒருவரின் உடலை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆபத்து என்று தெரிந்தும், குழந்தைகளுடன் அசாதாரண தைரியத்தில் ஆற்றுக்கு நடுவில் நின்று விடுமுறையை கழித்த செயலானது ஆபத்தில் முடிந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.