இந்தியா

மத்திய அமைச்சரவை மாற்றத்திற்கு இதுதான் காரணமாம்!

webteam

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்படுகிறது. இதில் புதிதாக 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாகவும், சில அமைச்சர்களுக்கு கேபினட் அமைச்சராக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

மேலும் சிலரது இலாகாக்கள் மாற்றப்படவும் வாய்ப்புள்ளது. அதன்படி பீகாரைச் சேர்ந்த ராஜ்குமார் சிங், அஷ்வினி குமார், கர்நாடகாவைச் சேர்ந்த அனந்தகுமார் ஹெக்டே, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சத்யபால் சிங், ஷிப் பிரதாப் சுக்லா ஆகியோர் அமைச்சர்களாகின்றனர். மேலும், கேரளாவைச் சேர்ந்த கே.ஜே. அல்ஃபோன்ஸ், டெல்லியைச் சேர்ந்த ஹர்தீப் சிங் பூரி, ராஜஸ்தானைச் சேர்ந்த கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வீரேந்திர குமார் ஆகியோர் அமைச்சராக பதவியேற்க உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2014 மே 26ஆம் தேதி பதவியேற்றது. இதில் 23 கேபினட், 10 தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 12 இணை அமைச்சர்கள் என 45 பேர் இருந்தனர். இதையடுத்து பல மத்திய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டதால், தற்போது 72 பேர் என்ற எண்ணிக்கையுடன் மத்திய அமைச்சரவை உள்ளது. மக்களவையின் மொத்த எம்பிக்களான 545 பேரில் 15 சதவிகிதமான 81 பேர் வரை அமைச்சரவையில் இருக்க அனுமதி உள்ளது. ஆனால் தற்போதுள்ள அமைச்சரவையில் பல துறைகள் காலியாகவும், சில அமைச்சர்களிடம் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக மனோகர் பரிக்கர் கோவா முதலமைச்சரானது, வெங்கய்யா நாயுடு துணை குடியரசுத் தலைவரானது மற்றும் அனில் மாதவ் தவே மரணம் உள்ளிட்ட காரணங்களால் காலியிடங்களும், சில அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இதனால் காலியான இடங்களை பூர்த்தி செய்யவும், கூடுதல் பொறுப்புகளை பகிர்ந்தளிக்கவுமே தற்போது மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்படுகிறது.