இந்தியா

பிறந்து சில மணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை - கலங்கவைக்கும் அவலம்

webteam

ஆந்திர மாநிலம் சித்தூரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையை முட்புதரில் வீசி சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் தம்பால பள்ளி தாலுக்கா பகுதியில் அமைந்துள்ள முட்புதரில் இருந்து குழந்தை அழுகுரல் சத்தம் கேட்டது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்த பொதுமக்கள் சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையை யாரோ முட்புதரில் வீசிச் சென்றது தெரியவந்தது. வீசப்பட்டதால் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவும், புதரில் இருந்த பூச்சிகள் கடித்தாலும், முட்கள் குத்தியிருந்ததாலும் குழந்தை வலியால் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. 

இது காண்போர் நெஞ்சை உருக்குவதாக அமைந்தது. குழந்தையை மீட்ட பொதுமக்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையை வீசி சென்ற நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு செப்டம்பர் 22ஆம் தேதி சர்வதேச மகள்கள் தினத்தை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடிய நிலையில், இன்று ஒரு பெற்றோர் அவர்களுக்கு பிறந்து சில மணி நேரங்களே ஆன மகளை முட்புதரில் வீசி சென்ற அவலம் நடந்திருக்கிறது.