இந்தியா

“இந்திய கடற்படை பின் தங்கியிருக்கிறது” - தளபதி அட்மிரல் கரம்பீர் சிங்

webteam

கடற்படையின் திறனை மேம்படுத்த பட்ஜெட்டில் ஒரு உறுதியான தொகை ஒதுக்கீடு செய்வது அவசியம் எனக் கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கடற்படை தளபதி, கடந்த 2012-2013 நிதிநிலை அறிக்கையின் போது பாதுகாப்புக்கான ஒதுக்கீட்டில் கடற்படைக்கு 18 சதவிகித நிதி ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால், தற்போது அந்த நிதி 13 சதவிகிதமாக குறைக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார். இது எதிர்காலத்திற்கான திட்டமிடுதலையும், திறன் மேம்பாட்டையும் பாதித்திருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார். 

இந்தியப் பெருங்கடல் பகுதியின் பாதுகாவலனாக இந்தியா திகழ்கிறது என்றும், பாதுகாப்பு விவகாரங்களில் ஒருசில நாடுகள் நம்மிடமிருந்து உதவியை எதிர்பார்க்கின்றன என்றும், ஆனால், அதனை நிறைவேற்றுவதற்கான போதிய நிதி நம்மிடம் இல்லாதது பெருங்குறையாக உள்ளது என்றும் தெரிவித்தார். 

புதிய தொழில்நுட்பங்களை பெறுவதில் கடற்படை பின் தங்கியிருப்பதாகவும் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கரம்பீர் சிங் நிதி பற்றாக்குறை கடற்படையின் விரிவாக்க திட்டங்களை ஓரளவு பாதித்துள்ளன எனக் குறிப்பிட்டார்.