viral video image x page
இந்தியா

மக்கள் முன்பே பெண்ணின் தலையில் 15 முறை ஸ்பேனரால் அடித்தே கொன்ற முன்னாள் காதலன்.. மும்பையில் கொடூரம்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், சாலையில் இன்று காலை இளைஞர் ஒருவர் தனது முன்னாள் காதலியை ஸ்பேனரால் அடித்துக் கொலை செய்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வசாய் கிழக்கு சின்ச்பாடா பகுதியின் சாலையில் இன்று காலை 8.30 மணிக்கு நடைபெற்ற சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அந்தச் சாலையில், இளம்பெண் ஒருவர் செல்கிறார். அப்போது அவருக்குப் பின்னால் ஓடிவரும் நபர், அவர் தலையில் ஒரு பெரிய ஸ்பானரைக் கொண்டு தாக்குகிறார். அந்த அடியில் அவர் அப்படியே தரையில் கீழே விழுகிறார். பின்னர், அவர் தலையை உயர்த்த முயல்கிறார்.

அப்போது அந்த நபர், அவரது தலையில் 15 முறை ஸ்பானரைக் கொண்டு தாக்குகிறார். அந்தக் கொடூரத் தாக்குதலில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இந்த கொடூரத் தாக்குலை மக்கள் சூழ்ந்தபடி பார்க்கின்றனர். அதில் ஒருவர், தாக்குதல் நடத்தும் நபரைத் தடுக்க முயல்கிறார். ஆனால், அவரையும் ஸ்பானரைக் காட்டி மிரட்டுகிறார். இதனால் அந்த மனிதர் பின்வாங்கிவிடுகிறார். வேறு எவரும் இந்த தாக்குதலை தடுக்க முன்வரவில்லை. இறுதியில் தாக்கிய அந்த நபர், இறந்துபோன பெண்ணிடம், "என்னை ஏன் ஏமாற்றினாய்" என திரும்பத்திரும்பக் கேட்டுவிட்டு மீண்டும் ஒருமுறை அவரைத் தாக்குகிறார். பின்னர், ரத்தம் நிறைந்த அந்த ஸ்பானரைத் தூக்கி எறிந்துவிட்டு செல்கிறார்.

இதையும் படிக்க: T20 WC | வெளியேறிய பாகிஸ்தான்.. நாடு திரும்ப அச்சம்.. ஒரு மாதத்திற்கு எஸ்கேப் ஆகும் 5 வீரர்கள்!

இந்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில், அந்த சம்பவத்தைச் செய்தவர் ரோஹித் யாதவ் எனக் கண்டறியப்பட்டிருப்பதுடன், அவர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் அவருடைய காதலியான ஆர்த்தி யாதவ் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், ஆர்த்தி யாதவ் ரோஹித்துடனான உறவை முறித்துக் கொண்டதாகவும், அந்த ஆத்திரத்தில்தான் அவரை ரோஹித் பழி தீர்த்திருப்பதாகவும் போலீசார் நடத்தியிருக்கும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிக்க: ஒடிசா| சாலையில் கொட்டிக் கிடந்த ரத்தம்.. இரு குழுக்களிடம் வெடித்த வன்முறை.. ஊரடங்கு உத்தரவு அமல்!

விருப்பமில்லை என்று சொல்லி உறவை முறித்துக்கொள்ளும் பெண்கள் மீதான வன்முறை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இது மிகவும் கண்டிக்கத்தக்க விஷயம். இதுவே ஒரு ஆண் பிரிந்து சென்றிருந்தால் பெண்கள் இப்படி செய்து இருப்பார்களா? இதுபோன்ற சம்பவங்களை ஊக்குவிப்பது எது என பார்த்து தடுத்து நிறுத்த வேண்டும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் செய்து கொடுக்க வேண்டும்.