இந்தியா

ரயிலில் அடிபட்டு கிடந்தவரை 1.5 கி.மீ தூரம் தோளில் தூக்கிச் சென்ற போலீஸ்..! (வீடியோ)

webteam

மத்திய பிரதேச போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞரை ஒன்றரை கிலோமீட்டர் தூரம் தோள்பட்டையில் சுமந்து சென்று உயிரை காப்பாற்றியுள்ளார். 

மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டம் அருகே நேற்று விரைவு ரயில் சென்று கொண்டிருந்தபோது அதில் பயணித்து கொண்டிருந்த ஒருவர் தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் கை, கால்களில் இருந்து இரத்தம்  வழிய, வலியால் துடித்து கொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

(போலீஸ் கான்ஸ்டபிள் பூனாம்சந்த்)

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு உடனே விரைந்தார் போலீஸ் கான்ஸ்டபிள் பூனாம்சந்த் பில்லூர். சம்பவம் நடந்த இடம் மலைப் பகுதி என்பதால் போலீஸ் வாகனத்தில் சிறிது தூரம் மட்டும் செல்ல முடிந்தது. இதனால் சம்பவம் நடந்த இடத்திற்கு 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற பில்லூர்,கீழே விழுந்தவர் இரத்தத்துடன் அதிக வலியில் இருப்பதைக் கண்டார். இதனால் அவரை காப்பாற்ற பயணியை தன் தோள்பட்டையில் சுமந்துகொண்டு அருகில் இருந்த ரயில் நிலையத்திற்கு  தூக்கிச் சென்றார். அதன்பின்னர் பயணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

போலீஸ் கான்ஸ்டபிள் பயணியை தூக்கி சென்றதை அருகில் இருந்தவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

போலீஸ் விசாரணையில் அந்தப் பயணியின் பேர் அஜித் என்பது தெரியவந்தது. அவர் தற்போது ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இரத்த வெள்ளத்தில் கிடந்தவரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தோள்பட்டையில் போலீஸ் தூக்கிச் சென்ற சம்பவம், மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை காட்டுவதாக கூறி பலதரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.