திருமண மோசடி கோப்பு படம்
இந்தியா

20 பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நபர்.. 35+ கைம்பெண்களே குறி.. திருமணத்தின் பெயரில் அரங்கேறிய மோசடி!

சண்முகப் பிரியா . செ

மகாராஷ்டிர மாநிலம் நலசோப்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நலசோப்ரா காவல் நிலையத்தில் தன்னை ஒரு ஆண் திருமணம் என்ற பெயரில் ஏமாற்றி ₹ 6.5 லட்சம் மதிப்புள்ள ரொக்கம், மடிக்கணினி மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடி விட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளனர். ஆனால் அந்த நபர் பற்றிய விவரங்கள் எதுவும் சரியாக இல்லாததால் அவரை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பெண்ணிடம் தீவிரமாக அவர்கள் விசாரிக்கவே, அந்நபர் திருமணத்திற்கு முன் தன்னை ஒரு மேட்ரிமோனியல் தளத்தில் தொடர்புகொண்டதாகவும் அதில்தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார் அப்பெண். மேலும் அந்த மேட்ரிமோனி கணக்கை கொடுத்துள்ளார்.

திருமண மோசடி

அதனை வாங்கிய போலீசார், அதே மேட்ரிமோனியல் தளத்தில் பெண்ணின் பெயரில் ஒரு போலி கணக்கை உருவாக்கி அதன் வாயிலாக அந்த நபரைத் தொடர்பு கொண்டுள்ளனர். சில நாட்கள் பேசிய பிறகு மகாராஷ்ட்ராவின் ‘அவரிக் கல்யான்’ பகுதியில் உள்ள ஒரு இடத்திற்கு நேரில் சந்திக்க வரும்படி அழைத்துள்ளனர். இவரும் பேசுவது ஒரு பெண் என நம்பி அங்கு சென்றுள்ளார். அங்கு அவரை சுற்றி வளைத்த போலீசார், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் அவர் பல திடுக்கிடும் உண்மைகளைக் கூறியுள்ளார்.

அதன்படி கைதான ஃபிரோஸ் நியாஸ் ஷெய்க் மஹாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியைச் சேர்ந்தவர். 43 வயதான இவர் மேட்ரிமோனி செயலிகள் மூலம் 35 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் கைம்பெண்களைக் குறிவைத்து அவர்களிடம் பேசி தன் வலையில் விழவைத்து திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார்.

பின் திருமணமான சில நாட்களிலேயே அப்பெண்களிடம் உள்ள பணம், நகை மற்றும் லேப்டாப் போன்ற விலை உயர்ந்த பொருட்களை திருடிக் கொண்டு ஓடியுள்ளார். அடிக்கடி தனது அடையாளங்களையும் அலைபேசி எண்களையும் மாற்றி வந்துள்ளதால் யாராலும் இவரைத் தொடர்பு கொள்ள இயலாமல் போயுள்ளது.

திருமண மோசடி

இவர் 2015 முதல் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி மற்றும் குஜராத் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் என்னும் பெயரில் ஏமாற்றியுள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இவரிடமிருந்து பாதிக்கப்பட்ட பெண்களின் மடிக்கணினி, மொபைல் போன்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், காசோலை புத்தகங்கள் மற்றும் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.