karnataka rave party arrest X Page
இந்தியா

கர்நாடகா: பண்ணையில் நடந்த பார்ட்டி... அதிரடியாக கைதான 50-க்கும் மேற்பட்டோர்! காரணம் என்ன?

PT WEB

கர்நாடக மாநிலம் மைசூரில் தனியார் பண்ணையில் நடந்த ரேவ் பார்ட்டியில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 8 இளம் பெண்கள் உட்பட 64 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்கள் மடிக்கேரி, பெங்களூரு, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர். மைசூரில் தசரா விழா நடந்து வரும் நிலையில், ரேவ் பார்ட்டி நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

இதனையடுத்து கே.ஆர் தாலுகாவைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரது தோட்டத்தில் நடந்த பார்ட்டியை ஆய்வு செய்தனர். அங்கு தொழிலதிபர்கள், மாணவர்கள் மற்றும் இளம் பெண்கள் என அனைவரும் ரேவ் பார்ட்டியில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து மயக்க நிலையில் இருந்த 15க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நிகழ்விடத்தில் போதைப்பொருள் ஏதும் கிடைக்காத நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் ரத்த மாதிரி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மைசூர் எஸ்.பி விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.