இந்தியா

ஓய்வூதிய பணத்தை வைத்து 6000 மாஸ்க் தயாரித்து வழங்கிய முதியவருக்கு மோடி பாராட்டு

webteam

தனது ஓய்வூதிய பணத்தை வைத்து 6000 மாஸ்க் தயாரித்து பொது மக்களுக்கு விநியோகித்த முதியவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 21 நாட்கள் அறிவித்த ஊரடங்கு உத்தரவு முடிவடைந்த நிலையில் மேலும் 19 நாட்கள் அதிகப்படுத்தி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பின் போது பேசிய மோடி, நாட்டு மக்களின் ஒத்துழைப்பு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிப்பதாக தெரிவித்தார். மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியர்கள் படை வீரர்கள் போல் செயல்படுவதாகவும் புகழாரம் சூட்டினார். ஊரடங்கு உத்தரவு காலத்தில் அனைவரும் அவசியத் தேவைகளுக்காக வெளியே வரும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதனிடையே ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக ஏழை மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், ரியசியைச் சேர்ந்த 74 வயதான ஓய்வூதியதாரர் யோக் ராஜ் மெங்கி, தனது மாத ஓய்வூதிய தொகையை வைத்து அவர் தயாரித்த 6000 க்கும் மேற்பட்ட முக கவசங்களை மக்களுக்கு விநியோகித்துள்ளார். அவர் இப்போது இலவச ரேஷனையும் விநியோகித்து வருகிறார். இதுகுறித்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, "இவரைப்போன்ற குடிமக்களை பார்த்து பெருமைப்படுகிறேன். கொரோனாவுக்கு எதிரான போரில் இவர்கள் பலத்தை கூட்டுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.