பிரதமர் மோடி pt web
இந்தியா

ஜூன் 8-ம் தேதி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்கிறாரா மோடி? ஆலோசனைக் கூட்டத்தில் நடந்ததென்ன?

Angeshwar G

இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 2 மணி நேர அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதாவது புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால் தற்போதைய மக்களவையை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் எனவும் அதற்கான தீர்மானத்தை குடியரசுத் தலைவரிடம் கொடுக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்ததாக புதிய அரசு அமைப்பதற்கான திட்டங்களை பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்னும் இரண்டு நாட்களுக்குள் எஞ்சியுள்ள பணிகளை முடித்து சனிக்கிழமை அன்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க வேண்டும் என திட்டமிட்டுள்ளனர்.

ஆகவே இன்று நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் ஆதரவுக் கடிதங்கள் பாஜகவிடம் கொடுக்கப்பட்டு அது குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்படும். அதற்குப் பின் பாஜக தலைமையிலான அரசு அமைப்பதற்கு உரிமை கோரப்படும்.

உரிமை கோரப்பட்டபின், சனிக்கிழமை அன்று பதவியேற்கும் நிகழ்ச்சியை நடத்தலாம் என்று அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. குடியரசுத் தலைவர் இல்லத்தில் இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசு தலைவரை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துள்ளார் பிரதமர் மோடி.

#BREAKING | பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்

முன்னதாக 9 ஆம் தேதியன்று பதவியேற்பு விழாவை நடத்தலாம் என திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாட்டு பயணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என வெளியுறவுத்துறை தெரிவித்திருப்பதால், ஒருநாள் முன்பாக 8 ஆம் தேதியே பதவியேற்பு விழாவை நடத்தி முடித்துவிடலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது நிலவும் அரசியல் குழப்பங்களும் முடிவுக்கு வந்துவிடும் என பாஜக தலைவர்கள் நம்புகிறார்கள்.