இந்தியா

"கடற்படையினரின் சேவையால் பெருமிதம்"- கடற்படை தினத்தில் மோடி, அமித் ஷா வாழ்த்து

Veeramani

கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படை வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "வீரம் நிறைந்த நமது கடற்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் கடற்படை தின வாழ்த்துகள். இந்திய கடற்படை வீரர்கள் அச்சமின்றி நமது கடல் எல்லைகளைப் பாதுகாக்கின்றனர். மேலும், தேவைப்படும் போதெல்லாம் நம் நாட்டு மக்களுக்கு உதவி வருகின்றனர். பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் இந்தியாவின் வளமான கடல் பாரம்பரியத்தையும் நாம் நினைவுகூர்வோம்" என்று பிரதமர் மோடி தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "கடற்படை தினத்தன்று வீரமிக்க நமது இந்திய கடற்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடல் எல்லைகளைப் பாதுகாத்து, இயற்கைப் பேரிடர்களின் போது நாட்டிற்காக சேவையாற்றும் கடற்படையினரை எண்ணி இந்தியா பெருமிதம் கொள்கிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1971-ஆம் ஆண்டு, இந்திய - பாகிஸ்தான் போரின்போது, கராச்சி துறைமுகத்தில் இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானை வெற்றி கொண்டது. இந்தத் தாக்குதல் 'ஆப்பரேஷன் ட்ரைடென்ட்' என்று அழைக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 4-ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.