இந்தியா

தொழிற்சாலை உள்கட்டமைப்பின் தலைவரானார் ரோஜா

தொழிற்சாலை உள்கட்டமைப்பின் தலைவரானார் ரோஜா

webteam

ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்.எல்.ஏ ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஆட்சியை கைப்பற்றியது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் 5 பேர் துணை முதலமைச்சர்களாகவும் 25 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்று கொண்டனர். 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5 துணை முதலமைச்சர்களும் எஸ்.சி., எஸ்.டி., பழங்குடி, ஓபிசி மற்றும் மைனாரிடிட்டி என ஒவ்வொரு வகுப்பை சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆட்சியிலும், கட்சியிலும் அனைவரும் சமம் என்பதை காண்பிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். 5 துணை முதல்வர்கள் என்பது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத முன் உதாரணம்.

பமுலா புஷ்பா ஸ்ரீவானி, பிள்ளை சுபாஷ் சந்திர போஸ், கிருஷ்ணா ஸ்ரீனிவாஸ், எல்.நாராயண சுவாமி மற்றும் அம்ஸாத் பாஷா ஆகிய 5 பேர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். 

ஆனால் நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏவுமான ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. துணை முதல்வர் பதவி, அமைச்சர் பதவி ஏதாவது ரோஜாவுக்கு வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எந்தப் பதவியும் கிடைக்காததால் ரோஜா அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியானது. 

இதனிடையே கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி வரும்போது அனைத்து எம்.எல்.ஏக்களும் அவரை வரவேற்க வந்திருந்தனர். ஆனால் ரோஜா அதிருப்தி காரணமாக வரவில்லை. இதனால் ரோஜாவை அழைத்து ஜெகன்மோகன் ரெட்டி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் ஆந்திர அரசின் முக்கியத்துறையில் ரோஜாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்.எல்.ஏ ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.