NDMA pt web
இந்தியா

உங்களுக்கும் வந்துச்சா? தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி: காரணம் என்ன?

Angeshwar G

பேரிடர் காலங்களில் மக்களுக்கு அவசர கால முன்னெச்சரிக்கை தகவல் அளிப்பது குறித்து நாடு முழுவதும் சோதனை செய்யப்பட்டது. சோதனை அடிப்படையில் 11 மணியளவில் அனைவரது செல்போன்களுக்கும் குறுந்தகவல் மூலம் எச்சரிக்கை செய்யப்படும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அபாய எச்சரிக்கை ஒலியுடன் அனைவரது செல்போனுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இயற்கை பேரிடர் காலங்களில் மழைப்பொழிவு அதிகளவில் ஏற்பட்டு மழை நீர் வரப்போகிறது, வேறு ஏதும் இயற்கை சிக்கல் ஏற்படப் போகிறதென்றால் ப்ராட்கேஸ்டிங் சிஸ்டம் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை கொடுப்பார்கள்.

சேப்பாக்கத்தில் இருக்கும் மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகள் இதனை சோதனை அடிப்படையில் மேற்கொண்டுள்ளனர். இதனைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழக அரசும் இணைந்து இச்சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

எடுத்துக்காட்டாக கடற்கரை ஓரங்களில் இருக்கும் மக்களுக்கு கடலில் ராட்சச அலைகள் அல்லது சுனாமிகள் எழும்பும் சூழல் ஏற்படுமானால் அதை அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அப்போது அப்பகுதியில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் குறுஞ்செய்திகள் அனுப்பப்படும்.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தொலை தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

முதலில் ஆங்கிலத்தில் அனுப்பப்பட்ட நிலையில் தொடர்ந்து தமிழில் அனுப்பப்பட்டது. அதில், “இது இந்திய அரசின் தொலைத் தொடர்புத் துறை மூலம் செல் ப்ராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனை செய்தி. உங்கள் முடிவில் இருந்து எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்பதால் இந்த செய்தியை புறக்கணிக்கவும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் பான் இந்தியா அவசர எச்சரிக்கை அமைப்பை சோதிக்க இந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது பொது பாதுகாப்பை மேம்படுத்துவதையும் அவசர காலங்களில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்றதொரு சோதனை கர்நாடகாவில் கடந்த வாரம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.