இந்தியா

ஆதரவற்றக் குழந்தையை வளர்ப்பதில் மதப் பிரச்னை: ஒருவருக்கு கத்திக்குத்து!

Rasus

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த குழந்தையை தத்து எடுத்து வளர்க்கும் ஒரே காரணத்திற்காக ஹிந்து மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் 16 முறை கத்திக் குத்திற்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் ரவிகாந்த். இவரின் மனைவி ஜெயஸ்ரீ. ஹிந்து மத வழக்கத்தை கடைபிடிப்பவர்கள். கடந்த 2007-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் சிறுமி ஒருவரின் பெற்றோர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் சிறுமி யாருமற்ற நிலைக்கு ஆளானார். இதனையடுத்து அதே 2007-ஆம் ஆண்டே அந்தச் சிறுமியை ரவிகாந்த்- ஜெயஸ்ரீ தம்பதியினர் தங்கள் குழந்தையாக தத்தெடுத்தனர். அவர்கள் வீட்டிற்கு கொண்டு வந்து வளர்த்து வந்தனர். ஆனால் இதற்கு முஸ்லிம் மற்றும் இந்து மதங்களை சேர்ந்த பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அது எப்படி ஹிந்து மதத்தை சேர்ந்த ஒருவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்த சிறுமியை தத்து எடுக்க முடியும் என கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் ரவிகாந்த் 16 முறை கத்தியால் குத்தி தாக்கப்பட்டுள்ளார். முஸ்லிம் மதத்தை சேர்ந்த சிறுமியை தத்து எடுத்து வளர்த்ததற்காக மட்டுமே நடத்தப்பட்ட இந்தக் கொடூர சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத கும்பல் இந்தத் தாக்குதல் சம்பவத்தை நடத்தியுள்ளது. இதனையடுத்து ரவிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி நடந்த இந்தச் சம்பவம் தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு பின்னர் பேசியுள்ள அந்தத் தம்பதி, “என்ன நடந்தாலும் குழந்தையை விட்டு விலக எங்களுக்கு மனமில்லை. குழந்தை இப்போது முஸ்லிம் மதத்தை பின்பற்றியே வளர்க்கப்படுகிறார். அவளை ஹிந்து மதத்திற்கு மாற நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை” என தெரிவித்தார்.

நாடு எவ்வளவோ முன்னேற்றம் கண்டாலும், இன்னும் மதங்களை வைத்து தாக்குதல் நடத்தும் சம்பவம் நடைபெறுவது அதிர்ச்சியளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.