இந்தியா

பாலியல் தொழிலில் காதலி: குத்திக் கொன்ற காதலன்!

Rasus

குடும்பம் நடத்த வராத மனைவி பாலியல் தொழிலில் இறங்கியதால் அவரைக் குத்திக்கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

புனே அருகேயுள்ள பகுதி, புத்வார் பேத். சிவப்பு விளக்கு பகுதியான இங்கு பாலியல் தொழிலாளியாக இருந்தவர் பிட்டி ஷேக். வயது 22. இங்கு அடிக்கடி வந்துபோகும் அதே பகுதியை சேர்ந்த சுகதேவுக்குப் பிட்டி மீது காதல். ’நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன். என்னோட வந்துடு’ என்றார் சுகதேவ். இந்த வார்த்தையை நம்பிய பிட்டி, அவருடன் சென்றார். இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இரண்டு வருடங்களாக நன்றாகச் சென்றுகொண்டிருந்த குடும்பத்தில், பணப் பிரச்னை எமனானது.

இது தொடர்பாக இரண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. பிறகு வீட்டை விட்டு வெளியேறிய பிட்டி, தனது பழைய தொழிலையே தொடர்ந்தார். பிட்டி இல்லாமல் சுகதேவால் வாழ முடியவில்லை. தீராத காதலால் அவரைத் தேடி அலைந்தார். எங்கும் அவர் கிடைக்கவில்லை. நேற்று முன் தினம் இரவு, முன்பு பிட்டியைப் பார்த்த அதே இடத்தில் அவரைக் கண்டுபிடித்தார் சுகதேவ். ’பணப்பிரச்னையை சமாளித்துக்கொள்ளலாம், என்னோடு வந்துவிடு’ என்று அழைத்தார். மறுத்தார் பிட்டி. வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுக்தேவ் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிட்டியை சரமாரியாகக் குத்தினார். பின்னர் அவர் கழுத்தை அறுத்துவிட்டு ஓடிவிட்டார். ரத்தவெள்ளத்தில் சாய்ந்த பிட்டி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதையடுத்து சுகதேவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.