இந்தியா

இறந்த குழந்தையை புதைக்க மண் தோண்டினால், உள்ளே உயிருள்ள குழந்தை!

webteam

இறந்த குழந்தையை புதைக்க மண்ணைத் தோண்டியபோது, உள்ளே உயிரோடு குழந்தை ஒன்று இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்தவர் ஹிதேஷ் குமார் சிரோகி. இவர் மனைவி வைஷாலி. பரேலியில், சப் - இன்ஸ்பெக்டராகப் பணியாற்றுகிறார். கர்ப்பிணியான அவருக்கு 7 மாதத்தில் பிரசவ வலி ஏற்பட்டது. தனியார் மருத்துவமனை ஒன்றில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு குழந்தை இறந்து பிறந்தது. 

அதை புதைப்பதற்காகச் சுடுகாட்டுக்குச் சென்றார், சிரோகி. அங்கு ஒரு இடத்தில் மண் வெட்டியால் தோண்டினார். மூன்றடி ஆழத்தில் மண்வெட்டி பதிந்தபோது, டொப் என்ற சத்தம் கேட்டது. பிறகு கவனமாக மண்ணை அள்ளினார். உள்ளே பானை ஒன்று இருந்தது. திறந்துப் பார்த்தால், அதில் பெண் குழந்தை ஒன்று உயிரோடு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிரோகியும் அவருடன் வந்தவர்களும் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

இதுபற்றி அந்தப் பகுதியின் எஸ்.பி அபிநந்தன் சிங் கூறும்போது, ‘குழந்தைக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தக் குழந்தையை யார் புதைத்தார்கள் என்பதுபற்றி விசாரித்து வருகிறோம்’ என்றார்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.