இந்தியா

கொரோனா பரவலை தடுக்க நாக்கை அறுத்துக்கொண்ட இளைஞர் !

jagadeesh

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தன்னுடைய நாக்கை அறுத்து தெய்வத்துக்கு காணிக்கையாக அளித்த இளைஞருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வைரஸின் தாக்கத்திலிருந்து 2,231 பேரும் மீண்டுள்ளனர். இந்த வைரஸின் தாக்க்ததை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஊரடங்கின் காரணமாக வெளி மாநிலத்துக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் இருக்கும் பவானி மாதா கோயிலில் சிற்ப பணிகளில் சிலர் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தொழிலாளர்களில் ஒருவர் விவேக், இவர் மத்திய பிரதேச மாநிலதைச் சேர்ந்தவர்.

இவர் சனிக்கிழமை தனது சக நண்பர்களிடம் சந்தைக்கு சென்று வருவதாகக் கூறி நாதேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் நாக்கு அறுபட்ட நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக கோயில் பூசாரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட போலீஸார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக விவேக் தன்னுடைய நாக்கை அம்மனுக்கு காணிக்கையாக கொடுக்க வேண்டிக்கொண்டு இவ்வாறு அறுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இத்தகைய சம்பவம் கோயில் வளாகத்திலேயே நடந்துள்ளதால் அப்பகுகி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.