இந்தியா

விமானப் பணிப்பெண்ணிடம் வில்லங்கம்: பாங்காக்கில் இருந்து வந்தவர் கைது

webteam

விமானப் பணிப்பெண்ணிடம் வில்லங்கமான செயலில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

மும்பையை சேர்ந்தவர் லோகேஷ்குமார் மக்வானா. இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாங்காக்கில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை வந்தார். விமானம் பாங்காக்கில் இருந்து இரவு கிளம்பியது. நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்த போது, ’விமானம் குலுங்கலாம், பயணிகளை சீட் பெல்ட் அணிய சொல்லுங்கள்’ என்று விமானப் பணிப்பெண்களிடம் சொன்னார் விமானி.  இதையடுத்து பயணிகள், சீட் பெல்ட் அணிந்திருக்கிறார்களா என விமானப் பணிப்பெண் சோதனை செய்துகொண்டிருந்தார். அப்போது லோகேஷ் குமார் அருகே வந்ததும் அதிர்ச்சியடைந்தார். அவர் அலங்கோலமான நிலையில் இருந்துகொண்டு விமானப் பணிப்பெண்ணை நோக்கி பல்லைக் காட்டினாராம். இதைக் கண்டுகொள்ளாத அவர், சீட் பெல்ட் அணிய சொல்லிவிட்டு தகவலை விமானியிடம் சொன்னார். இதையடுத்து மும்பை விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் மாக்வானாவை போலீசார் கைது செய்தனர்.

விமானங்களில் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் கடந்த 2 மாதங்களில் மட்டும் அதிகரித்துள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் டெல்லி-மும்பை விமானத்தில் உடன் பயணித்த பெண் பயணியை ஆபாசமாக தொட்டதாக, நாசிக்கைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூர்-மும்பை விமானத்தில், அருகில் இருந்த பயணி, தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக பெண் பயணி ஒருவர் புகார் கூறினார். டெல்லி- மும்பை விமானத்தில் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்தாக ஐடியில் பணியாற்றும் பெண் புகார் கூறினார்.