காதலியை கொன்றவர் புதிய தலைமுறை
இந்தியா

என்கவுண்டருக்கு அஞ்சாத சஞ்சய் தத்தின் ரசிகர்; படத்தைப் பார்த்து காதலியை கொலை செய்த சம்பவம்

சண்முகப் பிரியா . செ

உத்தரப் பிரதேசத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் ரசிகர் ஒருவர், சஞ்சய் தத் நடித்த திரைப்படத்தில் வருவதுபோல தன் காதலியைக் கொன்று விட்டு, அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியைச் சேர்ந்தவர் அதனன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த இரண்டரை வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார். சமீப காலமாக, தனது காதலிக்கு வேறு ஒரு ஆணுடன் பழக்கம் இருப்பதாக சந்தேகமடைந்த அதனன் அதுகுறித்து அடிக்கடி அப்பெண்ணிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.

இதனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னால் இருவரும் பிரிந்தனர். பிரிவை நினைத்து ஆத்திரமடைந்த அதனன் தன் காதலி தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கருதி அவரைப் பழிவாங்கத் திட்டம் போட்டுள்ளார்.

திட்டத்தின்படி, தனது காதலியை புலந்த்ஷாஹரில் உள்ள குர்ஜா நகர், கோட்வாலி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கல்லறைக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த காதலியை அவர் எதிர்பாராத தருணத்தில், தன்னிடமிருந்த ஆயுதத்தால் தாக்கி அவரை கொலை செய்துள்ளார்.

கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், காதலியின் தலையைத் தனியாக வெட்டி எடுத்து , கையில் பிடித்தபடி ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ”என் பெயர் பள்ளு. நான் சஞ்சய் தத்தின் ரசிகன். என் காதலி எனக்கு துரோகம் செய்ததால் அவரை நான் கொன்றுவிட்டேன். கடந்த 2.5 வருடங்களாக இந்தப் பெண் என் சம்பாத்தியங்கள் அனைத்தையும் தீர்த்துவிட்டாள். அவள் எனக்குச் செய்த துரோகத்திற்கு மரணம்தான் சரியான தண்டனை.

ஆகவே அவள் கொல்லப்பட வேண்டியவள் . இவள் மட்டுமல்ல நண்பர்கள் யாராவது எனக்கு துரோகம் செய்ய நினைத்தால் அவர்களுக்கும் இதே கதி தான். அத்தோடு எனது குடும்ப உறுப்பினர்கள் யாரையாவது பழிவாங்க நினைத்தால், அவர்களைக் கொன்று, அவர்களின் வீடுகளில் குண்டு வீசுவேன்.

ஒரே ஒரு கொலை செய்ததால் நான் என்கவுண்டருக்கு பலியாக மாட்டேன்.10 அல்லது அதற்கு மேற்பட்டவர்களை கொலை செய்தால் மட்டுமே என்கவுண்டர் நடக்கும். ஆகவே பல கொலைகள் செய்ய தூண்டி என்னை என்கவுண்டருக்குத் தயாராக்காதீர்கள் ”, என்று கூறி சிரித்துக்கொண்டே தனது கொலையை நியாயப் படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து அப்பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் குற்றவாளியைக் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சை தத்தின் படத்தைப் பார்த்து அவரது ரசிகர் கொலை செய்த சம்பவம் மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.