ஹாரியானா முகநூல்
இந்தியா

ஹரியானா | இதயத்தில் சிக்கிக்கொண்ட கத்தி.. 6 நாட்களுக்குப் பிறகு வெற்றிகரமாக அகற்றம்!

ஹாரியானாவை சேர்ந்த நபரின் இதயத்தில் கத்தி சிக்கிக்கொண்ட நிலையில், 6 நாட்கள் அறுவைசிகிச்சை செய்து அதனை சாதுர்யமாக அகற்றி அசத்தியுள்ளனர் மருத்துவர்கள். இதுபற்றி விரிவாக காணலாம்...

ஜெனிட்டா ரோஸ்லின்

ஹரியானாவை சேர்ந்த நபரின் இதயத்தில் கத்தியொன்று சிக்கிக்கொண்ட நிலையில், 6 நாட்கள் கவனமாக அறுவை சிகிச்சை செய்து அதனை சாதுர்யமாக அகற்றி அசத்தியுள்ளனர் மருத்துவர்கள். இதுபற்றி விரிவாக காணலாம்...

ஹரியானாவை சேர்ந்த தினேஷ் என்பவரை, கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி சில மர்ம நபர்கள் தாக்க முற்பட்டுள்ளனர். இந்த தாக்குதலின்போது அந்நபர்கள் கத்தியால் தினேஷின் இதயப்பகுதியில் குத்தியுள்ளனர்.

தினேஷின் டிரைவர் சமீர் இதுபற்றி உள்ளூர் ஊடகங்களில் கூறுகையில், “சிலர் தினேஷை திடீரென கடத்தி செல்ல முயன்று, அடிக்க ஆரம்பித்தார்கள்... இதனை கண்ட நான் உடனடியாக அவர்களை தடுக்க முயன்றபோது, என்னையும் அடிக்க முயன்றனர். தினேஷை தடுக்க நான் முற்படுகையில், அவர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இதயத்தில் கத்திகுத்துபட்டதால், படுகாயமடைந்த தினேஷை, அதிகாலை 2 மணி அளவில் ரோஹ்தக்கிலிருந்த PGI மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் அங்கிருந்த சிலர்.

அங்கு மருத்துவர்கள் தினேஷை சோதித்தபோது, கத்தியின் கைப்பிடி உடைந்த நிலையில், முழு கத்தியும் தினேஷின் இதயத்தில் முழுவதுமாக சிக்கி இருந்ததை கண்டுள்ளனர்.

பிஜிஐ மருத்துவமனை இயக்குநரும் மூத்த இதய அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் எஸ்எஸ் லோச்சப் கூறுகையில், "தினேஷின் நான்காவது கோஸ்டோகாண்ட்ரல் (இதயத்தின் ஒரு பகுதி) சந்திப்பு வழியாக வலது ஏட்ரியத்தில் (இதய தமனி) கத்தி நுழைந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் கத்தியை நேரடியாக அகற்றுவது அதிக ரத்தப்போக்கை ஏற்படுத்தி, நோயாளிக்கு மரணத்தை கூட ஏற்படுத்தும். ஆகவே நாங்கள் மிகவும் கவனத்தோடு கையாண்டோம்" என்று தெரிவித்துள்ளார்.

இப்படி கத்திகுத்துக்கு ஆளாக்கப்பட்டு, இதய அறுவை சிகிச்சை செய்து, உயிர்பிழைத்தவர்கள் கடினம். இதனையும் தாண்டி, அக்டோபர் 22 ஆம் தேதி, மருத்துவர்கள் நோயாளியின் இதயத்திற்கு அருகில் இருந்த சவ்வை கவனமாக திறந்து, கத்தியை அகற்றி, வலது தமனியையும் சரி செய்துள்ளனர். நோயாளியின் பாதிக்கப்பட்ட நுரையீரலும் சரி செய்யப்பட்டது.

ஆறு நாட்களுக்கு பிறகு மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை 4 மணி நேரத்தில் அசாத்தியமாக செய்து முடித்து அசத்தியுள்ளனர் மருத்துவர்கள். தற்போது, தினேஷின் உடல்நலம் தேறி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவர்களுக்கு, பலரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.