மோடி, மம்தா எக்ஸ் தளம்
இந்தியா

”ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; நீட் தேர்வை ரத்து செய்க” - பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்!

Prakash J

நாடு முழுவதும் மே 5ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி, 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதும் பிரச்னையாக உருவெடுத்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டன. அதன் விசாரணையில், வரும் நேற்று (ஜூன் 23) கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு மறுதேர்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து அந்த மாணவர்களுக்கான மறுதேர்வு நேற்று, நாடு முழுவதும் 7 மையங்களில் நடைபெற்றது.

நீட் தேர்வு

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல்களால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும், மாணவர்களும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, நீட் நுழைவுத் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரிலும் விசாரணை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ”எனக்கு இப்போதான் தெரியவந்தது” - ரசிகரை பாதுகாவலர் தள்ளிவிட்ட விவகாரம்.. மன்னிப்பு கேட்ட நாகார்ஜுனா!

இந்த நிலையில், நீட் தேர்வை மாநில அரசுகள் நடத்த அனுமதிக்கக்கோரி பிரதமருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

மம்தா பானர்ஜி

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் இன்று (ஜூன் 24) எழுதியுள்ள கடிதத்தில், ”தற்போதைய நீட் தேர்வு நடைமுறை, பெரும் ஊழலுக்கு வழிவகுப்பதாக உள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளால் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவர்கள் நலனை மனதில்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வு என்பது வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே பயனடையும் வகையில் உள்ளது.

மாநில அரசுகளுக்கு இதற்கான தேர்வுகளை நடத்துவதற்கான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். இது மாணவர்களின் இயல்புநிலை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும். 2017ஆம் ஆண்டுக்கு முன்பு மாநிலங்களே சொந்தமாக நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவருக்கும் மாநில அரசு ரூ.50லட்சம் செலவு செய்வதால், மாநிலங்களே மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சைவ உணவில் எலும்பு.. பிரியாணியில் புழு.. ஸ்விக்கி மீது அடுத்தடுத்து குற்றஞ்சாட்டிய பயனர்கள்.. #Photo