model image freepik
இந்தியா

மகாராஷ்டிரா| மகனின் வாயில் பேப்பரைத் திணித்துக் கொலை.. போதையில் தந்தை செய்த கொடூரம்!

Prakash J

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 59 வயதான நபர் ஒருவர், குடிக்கு அடிமையாகி உள்ளார். இதையடுத்து அவரது மனைவி, அவரைவிட்டுப் பிரிந்து சென்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அவருடைய 9 வயது மகனையும் அழைத்துச் சென்றுள்ளார். இதனால், அவரது கணவர், மேலும் குடி போதைக்கு அடிமையாகி உள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஜூன் 10ஆம் தேதி முதல் அந்தச் சிறுவனைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தச் சிறுவனைப் பலரும் தேடியுள்ளனர். இதற்கிடையே நேற்று காலை அந்தச் சிறுவனின் வாயில் பேப்பர் அடைக்கப்பட்டபடி, அவனது உடல் அவரது தந்தை வீட்டின் அருகில் கிடந்துள்ளது.

model image

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில், மகனை வீட்டுக்கு அழைத்துவந்து நோட்டுப் புத்தகத்தில் இருந்த பேப்பர்களை கிழித்து அதை ஒன்றுசேர்த்து பந்தாக செய்து மகனின் வாயில் திணித்துள்ளார். இதனால் சிறுவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூக்கில் இருந்து ரத்தம் வந்து உயிரிழந்துள்ளான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலைக்கு காரணம் இன்னும் தெரியவராத நிலையில், சம்பவத்தின்போது சிறுவனின் தந்தை குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரைக் கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: மத்தியப் பிரதேசம்| மாமியாரை 95 முறை கத்தியால் குத்திய மருமகள்.. மரண தண்டனை விதித்த நீதிமன்றம்