இந்தியா

சிவசேனாவை அடுத்து தேசியவாத காங்கிரசுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் அழைப்பு

rajakannan

சிவசேனா தலைவர்கள் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதத்தை அளிக்கவில்லை என்று மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் அதிக இடங்களை பெற்ற கட்சியான பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய ஆதரவு கிடைக்காததால் பாஜக அதனை நேற்று நிராகரித்தது. இதனையடுத்து ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை திரட்டும் முயற்சியில் சிவசேனா ஈடுபட்டது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இருகட்சிகளும் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், சிவசேனா தலைவர்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

இதனிடையே, மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை தரப்பில் சிவசேனா தலைவர்கள் சந்திப்பு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய சிவசேனா தலைவர்கள், ஆட்சியமைப்பதற்கு தேவையான ஆதரவை 3 நாட்களில் வழங்குவதாக கடிதம் அளித்தனர். ஆனால், ஆட்சியமைப்பதற்கு தேவையான ஆதரவு கடிதத்தை அளிக்கவில்லை. அதனால், அவர்களுக்கு ஆளுநர் கூடுதல் அவகாசம் அளிக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக, சிவசேனாவை தொடர்ந்து மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் பகத் சிங் கோஷாரி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் கூறுகையில், “8.30 மணியளவில் ஆளுநர் எங்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார். எங்கள் தலைவர்களுடன் ஆளுநரை சென்று சந்திக்கவுள்ளோம். எதற்காக அவர் எங்களை அழைத்தார் என தெரியவில்லை. இருப்பினும், ஆளுநர் மிகவும் முக்கியமான நபர் என்பதால் அவரை சென்று சந்திக்கிறோம்” என்றார். 

இதனையடுத்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநர் மாளிகைக்கு உடனடியாக சென்றுள்ளனர்.