தந்தை - மகன் விபரீத முடிவு ட்விட்டர்
இந்தியா

மகாராஷ்டிரா: கைகோர்த்தபடி சென்ற தந்தை, மகன்... திடீரென ரயில் முன் எடுத்த விபரீத முடிவு!

Jayashree A

சில தற்கொலைகள் நம் மனதை சஞ்சலப்படுத்திவிடும்... எதற்காக இந்த தற்கொலை முடிவு? ஏன் இப்படி ஒரு எண்ணம் அவர்களுக்குள் எழுகிறது? என்று நம்முள் நிறைய கேள்விகள் எழதான் செய்கிறது. தற்கொலை செய்துக்கொள்ளும் முன் சில நிமிடங்கள் யோசித்தால், பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். தீர்வே இல்லாத பிரச்சனை என்பது இந்த உலகத்தில் எதுவும் இல்லை. அதே சமயம், உலகத்தில் மகிழ்சியும், துக்கமும் நிரந்தரமுமில்லை என்பதை தெரிந்துக்கொண்டால் இப்படிப்பட்ட அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்கமுடியும்.

நேற்று ஒரு சம்பவத்திற்காக மகிழ்ச்சியடைந்திருப்போம். அதே சம்பவத்தை சில நாட்கள் கழித்து நினைவு படுத்தி பார்க்கையில் அந்த மகிழ்ச்சியானது குறைந்து இருக்கும். அதே போல்தான் பிரச்னைகளும். இன்றைய பிரச்னைகளை நாம் கடந்து விட்டால், எதிர்காலத்தில் ‘இதற்காகவா நாம் கவலைப்பட்டோம்?’ என்று எண்ணத் தோன்றும். அதனால்தான் ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பேச்சு வழக்கம் நம்மிடையே நிலவி வருகிறது.

தந்தை - மகன் விபரீத முடிவு

ஒரு குடும்பத்தில், கணவனால் மனைவியும், மனைவியால் கணவரும் அல்லது காதல் ஜோடிகள், தம்பதியர்கள் இப்படி எதிர் பாலினத்தவர்கள் தற்கொலை செய்து கொள்வதை செய்திகளில் கேட்டிருக்கிறோம். ஆனால் தற்போது, மும்பையில் தந்தையும் மகனும் ஒரு சேர கைகளைக் கோர்த்தப்படி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இது பார்ப்பவர்களின் நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது.

மும்பையை அடுத்துள்ள பயந்தர் ரயில் நிலயத்தில், கடந்த திங்கள்கிழமை காலை 10.30 மணி அளவில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவரும் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரும், ரயில் நிலைய நடைமேடையில் பேசியபடி நடந்து செல்கிறார்கள். அப்பொழுது எதிர்திசையில் மின்சார ரயில் ஒன்று வருவதை தெரிந்துக்கொண்டு இருவரும் கைகளைக்கோர்த்தப்படி, நிதானமாக நடந்துச்சென்று படுக்கவே, சில விநாடிகளில் ரயில் அவர்களின் மேல் ஏறிச்செல்கிறது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

தந்தை - மகன் விபரீத முடிவு

போலீசார் இதை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கையில் இறந்தவர்களில் ஒருவர் 35 வயதான ஜெய்மேதா என்றும், இன்னொருவர் அவரது தந்தை 60 வயதான ஹரிஷ்மேதா என்றும் தெரியவந்துள்ளது. இருவரும் நெலசோப்ரா பகுதியில் வசித்து வந்தவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் எதற்காக தற்கொலை செய்துக்கொண்டு இறந்தார்கள்? தற்கொலைக்கான காரணம் என்ன? என்பதை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.