குண்டுவெடிப்பு முகநூல்
இந்தியா

டெல்லியில் பள்ளி அருகே குண்டுவெடிப்பு போன்ற சத்தம்.. நடந்தது என்ன? காவல் துறை விசாரணை

டெல்லியின் ரோகினி பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளிக்கு வெளியே குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

டெல்லியின் ரோகினி பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளிக்கு வெளியே குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியின் ரோகினி பகுதியில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளிக்கு வெளியே இன்று (20.10.2024) காலை 7.45 மணி அளவில், குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

வெடித்தது வெடிகுண்டுதானா? என்ற தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், பெட்ரோல் குண்டா என்ன என்பது குறித்து, தற்போதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை..

ஆனால், பள்ளிக்கு அருகில் இருந்த சில பகுதிகள் சேதமடைந்திருக்கிறது.பள்ளியின் சுற்றுச்சுவரும் லேசாக சேதமடைந்திருக்கிறது.. நல்வாய்ப்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், பள்ளி விடுமுறையின் காரணமாக, யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.

இதனையடுத்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 2 தீயணைப்பு படையினர் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் வெடிகுண்டு நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் இப்பகுதிக்கு விரைந்து தற்போது இது தொடர்பாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.