இந்தியா

3 விவசாய மசோதாக்கள்: அம்சங்கள் என்ன? எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

webteam

விவசாயம் தொடர்பான 3 மசோதாக்களின் முக்கிய அம்சங்கள் என்ன? எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்? என்ற விவரங்கள்

நாடாளுமன்றத்தில் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களை தாக்கல் செய்தார். விவசாயிகள் விளைபொருள் வர்த்தக மேம்பாடு மற்றும் வசதிக்கான மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதத்துக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் அதிகாரமளித்தல் மசோதா, விவசாய சேவை மசோதா ஆகியவை அந்த மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நம் நாட்டில் 86 சதவிகித விவசாயிகள் 2 ஹெக்டேருக்குள் நிலம் வைத்திருப்பவர்கள் என்றும் அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையால் பலன் கிடைப்பதில்லை என்றும் அமைச்சர் தோமர் கூறியுள்ளார். எனவே, விவசாயி தனது விளைபொருளுக்கு விலையை அவரே முடிவு செய்ய இந்த மசோதா வகை செய்வதாக தெரிவித்தார். இப்போது விளைபொருளுக்கு விலையை வர்த்தகர்கள் தீர்மானிக்கும் நிலையை மாற்றி விவசாயிக்கு அந்த அதிகாரம் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தனது விவசாயத்தில் பிறரிடம் முதலீட்டைக் கவரவும், தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யவும் விவசாயிக்கு இந்த மசோதாக்கள் ஊக்கமளிப்பதாகவும் எனவே, மசோதாக்களின் அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளும்முன் அவற்றை எதிர்க்க வேண்டாம் என்றும் எதிர்க்கட்சிகளை அமைச்சர் தோமர் கேட்டுக் கொண்டார்.

ஆனால், விவசாயம் மற்றும் சந்தைகள் மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை என்றும் இதில் மத்திய அரசு தலையிடுவது கூட்டாட்சிக்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. மசோதாக்கள் சட்டமானால் குறைந்தபட்ச ஆதார விலை இல்லாமல் போய்விடும் என்றும் அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்றும் கூறுகின்றனர். மாநிலங்களுக்கு இடையிலான வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிகள் மத்திய அரசின் கீழ் வர வழியேற்படும் என்றும் சந்தைக் கட்டணம், வரிகள் ஆகியவை மாநில அரசுகளுக்கு கிடைக்காமல் போகலாம் என்றும் எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன.

விவசாயிகளிடம் கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாக குறைந்த விலைக்கு விளைபொருளை கொள்முதல் செய்வதுடன், விளைவிக்கும் பயிரையும் முடிவு செய்யும் நிலை ஏற்படக்கூடும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றன. எனினும், இந்த மசோதாக்கள் முற்றிலும் விவசாயிகளுக்கு அதிகாரமளித்து வருவாயை பெருக்கும் நோக்கிலேயே உள்ளதாகவும், குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்றும் அமைச்சர் தோமர் விளக்கம் அளித்துள்ளார்.