மக்களவை தேர்தல் 2024 முகநூல்
இந்தியா

இன்னும் சற்று நேரத்தில்... தொடங்கவுள்ளது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை!

PT WEB

நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

மக்களவை தேர்தல்

தொலை தூர கிராமங்கள், மலைப்பகுதிகளில் உள்ள ஊர்கள் உள்பட பல்வேறு இடங்களையும் சேர்த்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத் மாநிலம் சூரத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மீதமுள்ள 542 தொகுதிகளில் பாஜக கூட்டணி, I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் பிறக்கட்சியைச் சேர்ந்தவர்கள் களம் கண்டனர். முதல்கட்டத்தேர்தலில் 66.1 சதவிகிதம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தேர்தலில் முறையே 66 புள்ளி 7 மற்றும் 61 சதவிகித வாக்குகள் பதிவாகின. இதேபோல் நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் கட்டத் தேர்தலில் 67.3, 60.5, 63.4 சதவிகித வாக்குகள் பதிவாகின.

கடைசி கட்டத் தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. தேசத்தில் மொத்தம் நாட்டில் வாக்களிக்க தகுதியுடைய சுமார் 97 கோடி பேரில், 64 கோடியே 20 லட்சம் பேர் ஜனநாயக கடமையாற்றியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.