பதஞ்சலி pt web
இந்தியா

பதஞ்சலியின் 14 பொருட்களுக்குத் தடை... உத்தரகாண்ட் அரசு அதிரடி! மீண்டும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!

Prakash J

யோகா குருவான பாபா ராம்தேவ்-வின், ‘பதஞ்சலி’ நிறுவனம் விளம்பரம் தொடர்பான வழக்கில் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்திடம் குட்டு வாங்கி வருகிறது. இந்த நிலையில், நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அசானுதீன் அமானுல்லா அமர்வு முன்பு, இவ்வழக்கு, இன்று (ஏப்.30) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாபா ராம்தேவ் நேரில் ஆஜரானார். மேலும், தவறான விளம்பரம் கொடுத்தது குறித்து மன்னிப்பு கோரி நாளிதழ்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களின் நகல் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிா்வாக இயக்குநா் பாலகிருஷ்ணா ஆகியோர் தரப்பில் நீதிபதிகள் முன்பு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, “விளம்பரங்களின் இ-பேப்பர்களையும், கத்திரிப்பு பிரதிகளையும் ஏற்க முடியாது. அனைத்து நாளிதழ்களின் அசல்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிக்க: வேட்பு மனு வாபஸ்.. பாஜகவில் ஐக்கியம்.. ஷாக் கொடுத்த காங். வேட்பாளர்.. இந்தூரிலும் பாஜக வெற்றி?

மேலும், இந்த வழக்கில் உத்தரகாண்ட் அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்துக்கு மறுப்பு தெரிவித்து, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முன்னும் பின்னும் பதஞ்சலி நிறுவனத்தின் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து முழுமையாக திருத்தி தாக்கல் செய்ய 10 நாள்கள் அவகாசம் அளித்தனர். அத்துடன், அடுத்த விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணாவுக்கு விலக்கு அளித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

உச்சநீதிமன்றம்

முன்னதாக, பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை விதித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் உத்தரகாண்ட் அரசு இன்று தெரிவித்தது. மேலும் இதுதொடர்பாக நேற்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

மேலும், பதஞ்சலி நிறுவனத்தின் மீதும், அதன் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் ஆயுா்வேத நிறுவன நிா்வாக இயக்குநா் பாலகிருஷ்ணா ஆகியோர் மீது குற்றப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: CSK Vs SRH|ஃபீல்டிங் அமைத்த தோனி.. வீழ்ந்த டிராவிஸ் ஹெட்.. ஷாக் ஆன காவ்யா மாறன்! #Videoviral