பிரேதப் பரிசோதனை எக்ஸ் தளம்
இந்தியா

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை|உடலில் இருந்தது150 கிராம் விந்தணுவா? பிரேதப் பரிசோதனை சொல்வது என்ன?

Prakash J

வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரத்தில், சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு நியாயம் கேட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இதில் மாநில அரசின் போக்கு மெத்தனமாக உள்ளதாக புகார் எழுந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மத்திய புலனாய்வு அமைப்பும் விசாரணையை நடத்தி வருகிறது.

இதற்கிடையே பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த தகவல்களை வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாகவும் இக்கொலை சம்பவத்தில் மருத்துவமனைக்கு உள்ளேயும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே மாநிலத்தின் முதல்வர் மம்தாவே குற்றஞ்சாட்ட நபர்களுக்கு கடும் தண்டனை தரவேண்டும் எனக் கூறி பேரணி நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சிபிஐ குழுவைச் சேர்ந்த 5 மருத்துவர்கள் சஞ்சய் ராயிடம் உளவியல் சோதனை நடத்தினர். அடுத்தகட்டமாக நீதிமன்ற அனுமதியுடன் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. இதனிடையே வழக்கின் தீவிரத்தை உணர்ந்து உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இதையும் படிக்க: ”UPSC-க்கு பதில் RSS மூலம் அரசுப் பணிக்கு ஆள் சேர்ப்பா? இதுதான் மோடியின் உத்தரவாதம்” - ராகுல் காந்தி

இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் பிறப்புறுப்பில் 150 கிராம் அல்லது 150 மில்லி கிராம் அளவு விந்தணு இருந்ததாகவும், அது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்திருப்பதாகவும் கடந்த வாரம் இணையத்தில் செய்திகள் வெளியாகின. அதைவைத்தே, தனது மகள் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அந்தப் பெண்ணின் பெற்றோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இதுதொடர்பாக, உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்களில் குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த அறிக்கை அந்த கூற்றுகளை நிராகரித்திருக்கிறது.

வெள்ளையான தடிமானான பிசுபிசுப்பு தன்மையுடனான திரவம் ஒன்றை பெண்ணின் உடலில் கண்டெடுத்ததாகக் கூறப்பட்டாலும், அது என்னது என்பது குறித்து எங்கும் குறிப்பிடவில்லை. உடற்கூராய்வு அறிக்கையை தயார் செய்யும்போது, உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு உடல் உறுப்புகளும் எவ்வளவு எடை இருக்கிறது என அளவிட வேண்டும். அதனை அறிக்கையிலும் குறிப்பிட வேண்டும். அந்தவகையில், உயிரிழந்த பெண்ணின் பிறப்புறுப்பு 151 கிராம் இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அந்த அறிக்கையில், தொடர்புடைய உறுப்புகளின் எடை 'Wt' என்ற சுருக்கத்தைப் பயன்படுத்தி குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக, இதயத்தின் எடை ’Wt- 212gm’ என்றும், மண்ணீரலின் எடை ’Wt- 90gm’ என்றும் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையிலேயே கொலை செய்யப்பட்ட பெண்ணின் பிறப்புறப்பின் எடையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ’வெளிப்புற மற்றும் உள் பிறப்புறுப்பு' என்ற தலைப்பில், ’எண்டோசர்விகல் கால்வாயின் உள்ளே வெள்ளை அடர்த்தியான பிசுபிசுப்பு திரவம் உள்ளது. இது மேலே குறிப்பிட்டபடி சேகரிக்கப்படுகிறது. அதன் எடை, Wt-151gm என அது தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: லிப்ஃட் கேட்ட மாணவி.. பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய நபர்.. பெங்களூருவில் அதிர்ச்சி!

இதுகுறித்து தடயவியல் நிபுணர் ஒருவர், “வழக்கமாக விந்து திரவம் மில்லி அளவில் அளவிடப்படுகிறது. கிலோ கிராமில் அல்ல. அந்தப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இதயம், கல்லீரல், சிறுநீரகம், மண்ணீரல் உள்ளிட்ட பிற உறுப்புகளின் எடைகள் கிராம் அளவில் உள்ளன. 151 கிராம் என்பது உள் மற்றும் வெளிப்புற பிறப்புறுப்பின் கூட்டு எடையாகும். கூறப்பட்டபடி 150 மில்லி கிராம் விந்து மீட்கப்பட்டதாக அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தக் கூற்று தவறானது என கொல்கத்தா காவல் துறை, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா ஆகியோர் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அமெரிக்க அதிபர் தேர்தல்: கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை.. உருவரீதியாகச் சீண்டும் ட்ரம்ப்!