இந்தியா

சூரிய கிரகணத்தின் போது கழுத்துவரை மண்ணில் புதைப்பு - கதறி அழுத சிறுவர்கள்!

webteam

சூரியகிரகணத்தின் போது கர்நாடகாவில் 10 வயதுக்குட்பட்ட சில சிறுவர்களை கழுத்துவரை மண்ணில் புதைத்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.

நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இன்று தெரிந்தது. இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் முழுமையாக தெரிந்தது. இருப்பினும் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் பல இடங்களில் கிரகணத்தை பார்க்க முடியவில்லை. கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது என்றும் கிரகணத்தின் போது வெளியில் பயணம் செய்யக்கூடாது என்றும் பலரும் அறிவியல்ரீதியில் நிரூபிக்கப்படாத தகவல்களை பரப்பினர். இதனால், பலரும் சூரிய கிரகணத்துக்கு முன்பாகவே காலை உணவை உட்கொண்டனர்.

இந்நிலையில், சூரிய கிரகணத்தின் போது கர்நாடகாவில் 10 வயதுக்குட்பட்ட சில சிறுவர்கள் கழுத்துவரை மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகாவின் கல்புர்கி பகுதியில் உள்ள தாஜ்சுல்தான்புர் என்னும் இடத்தில் 10 வயதுக்குட்பட்ட சில சிறுவர்கள் கழுத்துவரை மண்ணில் புதைக்கப்பட்டனர். சூரிய கிரகணத்தின் போது இப்படி செய்தால், குழந்தைகளுக்கு தோல் நோய் ஏற்படாது என்றும், உடல் ஊனம் ஏற்படாது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அறிவியல்ரீதியில் எதுவும் அப்படி நிரூபிக்கப்படாத நிலையில், பெற்றோரின் மூட நம்பிக்கையினால் குழந்தைகள் சித்திரவதை அனுபவித்துள்ளதாக இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இனிவரும் காலங்களிலும் இது போன்ற மூட நம்பிக்கையில் பெற்றோர்கள் ஈடுபடக்கூடாது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்