கேரளாவில் முதன்முறையாக பாதாளச் சாக்கடை தூய்மை செய்யும் பணிக்கு ரோபோக்களை பயன்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
எத்தனையோ தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ந்தாலும், பாதாளச் சாக்கடை தூய்மை பணியில் இன்றுவரை மனிதர்கள்தான் ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் சில இடங்களில் கைகளில் போதிய கையுறை இல்லாமல் கூட அவர்கள் சாக்கடைகளை அள்ளும் பணிகளில் ஈடுபடுவதும் உண்டு. கழுத்து வரை சாக்கடை குழியில் நின்று தினம் தினம் சாக்கடைகளை தூய்மை செய்துவரும் அவர்களின் உயிருக்கும் உத்தரவாதம் கிடையாது.
இந்நிலையில் கேரளாவில் முதன்முறையாக பாதாளச் சாக்கடை தூய்மை பணிக்கு ரோபோக்களை பயன்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஜென்ரோபோடிக்ஸ் என்ற நிறுவனம் வடிவமைத்த ரோபோக்களை கொண்டு பாதாளச் சாக்கடைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் சோதனை ரீதியாக மேற்கொள்ளப்பட்டது. இதில், வெற்ற கிடைத்ததை தொடர்ந்து ரோபோக்களை சாக்கடை தூய்மை பணிக்கு அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சோதனையின் போது ஒரு மணி நேரத்தில் நான்கு பாதாளச் சாக்கடைகளை ரோபோக்கள் தூய்மைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.