இந்தியா

'கேரளத்தின் ஆர்மி'க்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மக்கள் !

webteam

கேரளாவின் ஆர்மி என்று அனைவராலும் கவுரவிக்கப்பட்ட மீனவர்களுக்கு கேரளாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்

செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், சமூகவலைதளங்கள் போன்ற அனைத்திலும் கடந்த சில நாள்களாக கேரள வெள்ளம் தொடர்பாக பரவலாகப் பேசப்பட்டது. கேரளாவைச் சூழ்ந்த வெள்ளத்திலிருந்து பொதுமக்களை மீட்க ராணுவம் ஹெலிகாப்டர் கொண்டு மீட்புப்பணியில் ஈடுபட்ட போது மறுபுரம் யாரும் கால் பதிக்க முடியாத பகுதிகளுக்கெல்லம் மீனவர்கள் படகு மூலம்மீட்புப் பணியில் ஈடுபட்டது அனைவரது பாராட்டையும் பெற்றது. கேரள மக்களைப் பொறுத்தவரை மீனவர்கள் பற்றிய செய்திகளே அதிகம் பகிரப்படுகின்றன. மழை, வெள்ளத்தால் நிலைகுலைந்த கேரள மக்களை மீட்ட பெரும் பங்கு மீனவர்களைச் சேரும். 

வெள்ளபாதிப்பு எனத் தகவல் தெரிந்தவுடன் தங்களின் சொந்தப் படகுகள் மூலம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மாநிலத்தின் பலபகுதிகளுக்கும் சென்று லட்சக்கணக்கானவர்களை மீட்டுள்ளனர். பேரிடர் மீட்புக் குழுவினர், கடலோரக் காவல் படையினர் ஒருபுறம் தீவிரமாக செயல்பட அவர்களுக்குத் தோள் கொடுத்து தங்கள் பங்குக்கு அதிக மக்களை மீட்டது மீனவர்கள்தான். கேரளமக்கள் மீனவர்களுக்கு 'மாநிலத்தின் ஆர்மி' என்ற பெயர் சூட்டியுள்ளனர். சமூகவலைதளங்களில் பலரும் மீனவர்களுக்கு நன்றிதெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தங்களின் மீட்புப்பணிகள் நிறைவடைந்ததும் சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாரான மீனவர்களுக்கு கேரளாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

அதேபோல் மக்கள் வழி நெடுகிழும் நின்று மீனவர்களுக்குக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். தங்களுக்கு உதவிய மீனவர்களுக்கு மக்கள் நன்றி தெரிவிக்கும் காட்சி அனைவரின் மனதையும் நெகிழச் செய்துள்ளது.