இந்தியா

ஐஸ் கிரீமில் எலி மருந்து: தவறுதலாக சாப்பிட்ட மகன், சகோதரி உயிரிழப்பு - தாய் கைது!

webteam

ஐஸ் கிரீமில் எலி மருந்தை கலந்து தற்கொலைக்கு முயன்ற பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கலந்த எலி மருந்து ஐஸ் கிரீமை சாப்பிட்ட 5 வயது மகனும், 19 வயது சகோதரியும் உயிரிழந்தனர்.

கேரளாவின் கசராகாட் மாவட்டத்தின் கான்கன்காட் பகுதியைச் சேர்ந்தவர் வர்ஷா. மன உளைச்சலில் இருந்த 25வயதான வர்ஷா, ஐஸ் கிரீமில் எலி மருந்தை கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பாதி ஐஸ்கிரீமை சாப்பிட்ட அவர் மயக்க நிலையில் தனது அறைக்குச் சென்றுள்ளார். மீதி இருந்த ஐஸ் கிரீமை வீட்டுக்குள்ளேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார். அந்த ஐஸ் கிரீமைக் கண்ட அவரது ஐந்து வயது மகன் எடுத்து சாப்பிட்டுள்ளார். அதேபோல வர்ஷாவின் தங்கையும் ஐஸ்கிரீமை சாப்பிட்டுள்ளார்.

ஐஸ் கிரீமை சாப்பிட்ட இருவரும் உடனடியாக பிரியாணியும் சாப்பிட்டுள்ளனர். சில மணி நேரங்களில் நடு இரவில் சிறுவனுக்கு கடுமையான வாந்தி ஏற்பட்டது. உடனடியாக அவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். அதேபோல் எலி மருந்து ஐஸ் கிரீமைச் சாப்பிட்ட வர்ஷாவின் சகோதரிக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒருவாரம் சிகிச்சையில் இருந்த அவரும் பின்னர் உயிரிழந்தார். இருவரும் சாப்பிட்ட பிரியாணியால்தான் பிரச்னை என நினைத்த வர்ஷா கணவரின் குடும்பத்தினர் பின்னர் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். எலி மருந்து ஐஸ் கிரீம் சாப்பிட்டும் தனக்கு ஏதும் உடல்நிலை பாதிப்பு ஏற்படவில்லை என்பதால் வர்ஷா இது குறித்து வாய்திறக்கவில்லை. ஆனால் போலீஸ் விசாரணையில் நடந்ததை ஒப்புக்கொண்ட வர்ஷாவை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

வர்ஷா மீது இரு வழக்குப்பிரிவுகளை பதிவு செய்துள்ள போலீசார், அவர் ஏன் தற்கொலைக்கு முயன்றார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.