இந்தியா

முகநூல் பதிவால் பேராசிரியைக்கு சிக்கல்: மிரட்டும் பாஜக பிரமுகர்

webteam

கேரளாவை சேர்ந்த பேராசிரியை ஒருவர் பாஜக பிரமுகருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

கேரளாவை  சேர்ந்த பேராசிரியை தீபா நிஷாந்த். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.  இவர் காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் குறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்த தீபக் சங்கரநாராயணன் என்பவர் கத்துவா விவகாரம் குறித்து தனது முகநூலில் காரசாரமாக கருத்து தெரிவித்துள்ளார்.அவரது பதிவை தான் தீபா தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.இவரது பதிவில் கேரளாவை சேர்ந்த பாஜக பிரமுகர் மோகன்தாஸ் கடுமையான கருத்துக்களையும் தீபாவை குறித்து அவதூறு கூறியதாக தெரிகிறது. முகநூல் பதிவில் சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர். 

இதுதொடர்பாக தீபா காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். தீபா ஃபேஸ்புக் ஸ்கீரின் ஷாட்டுகளையும் அவரது புகாரில் இணைத்துள்ளார்.அதில் “அவளுடைய இரத்தத்தையும் நாங்கள் விரும்புகிறோம். அவர் தனது வரம்புகளை கடந்துவிட்டார்” என பதிவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தீபா பேசுகையில், பாஜக பிரமுகர் மோகன்தாஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தனது செல்போன் எண்ணையும், முகவரியையும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனால் தனிப்பட்ட முறையில் பல்வேறு பிரச்னைகளை  சந்தித்து வருகிறேன்.எனது புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். எனக்கு தொடர்ந்து மிரட்டல் வந்ததையடுத்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளேன் எனக் கூறினார்.

தீபாவின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பிரமுகர் மோகன் தாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.