நிகிலா விமல் புதியதலைமுறை
இந்தியா

கேரளா | நிலச்சரிவு நிவாரணப் பணியில் கேரள நடிகை நிகிலா விமல்

Jayashree A

பருவமழையின் கோர தாண்டவத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது கேரளாவின் வயநாடு பகுதி. கடந்த வாரம்பெய்த கனமழையால் கேரளா கர்நாடக எல்லைப்பகுதியில் உள்ள ஷிரூரில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியபடி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் லாரி ஓட்டுநர் உட்பட 7 பேர் பலியான நிலையில் காணாமல் போன சிலரை தேடும் பணியானது முடிவுக்கு வராதநிலையில், கடந்த ஜூலை 29 ஆம் தேதி கேரளாவின் , வயநாடு மாவட்டத்தில் சூரல்மலை, முண்டகை, மேப்பாடி என அருகே அடுத்தடுத்த இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், மூணாறிலும் பல்வேறு சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கொச்சி மற்றும் தமிழ்நாட்டில் உடுமலை, தேனிக்கு செல்லும் சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் மீட்பு குழுவினரும் தன்னார்வல தொண்டைச் சேர்ந்த சிலரும் அதிகம் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கு சென்று அங்கிருக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கேரளா கண்ணூர் மாவட்டம் தளிபரத்தை சேர்ந்த பிரபல நடிகை நிகிலா விமலும் தனது பங்கிற்கு வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பேரிடர் பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் கண்ணூரில் உள்ள தளிபரம்பா சேகரிப்பு மையத்தில் நிகிலா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

நிகிலா விமல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. முன்னுதாரணமாக திகழ்வதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.