cycle google
இந்தியா

கேரளா: கொச்சியில் மீண்டும் தலைதூக்கும் சைக்கிள் கலாசாரம்... எப்படி சாத்தியமானது தெரியுமா?

Jayashree A

சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் தனிநபர்கள் அலுவலகம் செல்வதாக இருந்தாலும் சரி, வெளியில் செல்வதாக இருந்தாலும் சரி... பெரும்பாலும் அரசு பேருந்துக்காக காத்திருப்பதில்லை... தங்களது இரு சக்கர வாகனம் அல்லது கார் போன்ற வாகனத்தையே பெரிதும் உபயோகப்படுத்துகின்றனர்.

இதனால் பெட்ரோல் டீசலுக்காக அதிகமாக தொகையை அவர்கள் செலவழிப்பதுடன், காற்று மாசுபாட்டுக்கும் வழிவகுக்கின்றனர். இன்னொருபக்கம், உள்ளூர் ரயிலில் பயணத்தை மேற்கொள்ளும் மக்கள் தங்களது வாகனங்களை ரயில்வே நிலயத்தில் இருக்கும் வாடகை நிலையத்தில் நிறுத்தும் பொழுது அதற்காக தனிக்கட்டணமும் செலுத்தவேண்டியுள்ளது. இத்தகைய அசௌரியங்களை தவிர்க்க, கேரள அரசு ஒரு முன்மாதிரியான முடிவை கையில் எடுத்துள்ளது.

கொச்சி மெட்ரோ

கேரளாவில் பொதுமக்களின் வசதிக்காகவும், காற்று மாசுபாட்டை தவிர்க்கவும் மெட்ரோ நிர்வாகத்துடன் இணைந்து ‘My Bike’ என்ற வாடகை சைக்கிள் ஒப்பந்தத்தை போட்டுள்ளது அம்மாநில அரசு. ஒவ்வொரு மெட்ரோ வளாகத்திலும், பயணர்கள் பயன்பெரும் வகையில் வாடகைக்கு சைக்கிள்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதனால் அலுவலகம் செல்பவர்களும், வெளியிடங்களுக்கு செல்பவர்களும், தங்களின் இரு சக்கர வாகனத்தை உயபோகப்படுத்துவதைத் தவிர்த்து இந்த வாடகை சைக்கிளை அதிகம் உபயோகப்படுத்தி வருகின்றனர்.

இதனால் கொச்சியில் சைக்கிள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. இதை எப்படி பயன்படுத்தலாம் என்றால், மொபைலில் mybyk என்ற APP பதிவிறக்கம் செய்து, அதன்மூலம் தங்களின் குறிப்பினை பதிவு செய்து வாடகைக்கு சைக்கிள் எடுத்து ஓட்டலாம்.

இதற்கான கட்டணமாக, 20 ரூபாய் செலுத்தினால் 10 மணி நேரம் வரையில் சைக்கிளை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு வைப்புத் தொகையாக ரூ 500 பெற்றுக்கொள்கின்றனர். பயணத்தை முடித்துக்கொண்டு சைக்கிளை விடும் பொழுது வைப்புத்தொகையை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும். இதில் மாதாந்திரம் மற்றும் வாராந்திர திட்டங்களும் உள்ளன. இதில் சைக்கிள் எடுத்து குறிப்பிட்ட நேரத்துக்குள் ஏதேனும் பழுதடைந்து இருந்தால், உடனடியாக அதே செயலி மூலம் தகவல் தெரிவித்து மாற்று சைக்கிளை பெற்றுக்கொள்ள முடியும் என்கிறார்கள்.

ஆலுவா மற்றும் திரிபுனித்துரா நிலையங்களில் சைக்கிள் வைப்பதற்கு போதுமான இட வசதி இல்லாததால் இந்த மெட்ரோ நிலையங்களை தவிர மற்ற அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் சைக்கிள் வசதி உள்ளன.

இந்த வசதியினை பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் உடற்பயிற்சி மேல் அக்கறைக்கொண்டோர் அதிகம் உபயோகப்படுத்திக் கொள்வதாக தகவல் வெளிவந்துள்ளது

இதையெல்லாம் கேட்கும்போது, ‘அட நம்ம ஊரிலும் Smart Bike என்ற பெயரில் மெட்ரோ வாசலில் சைக்கிள் வைக்கப்பட்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதே...’ என சென்னைவாசிகளுக்கு தோன்றலாம்... நீங்கள் நினைத்தது சரிதான். தமிழ்நாடு அரசு சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் பைக் திட்டத்தை 2019-லேயே அமல்படுத்திவிட்டது. இன்றும் ஒவ்வொரு சென்னை மெட்ரோ வாசலிலும் இந்த சைக்கிள்கள் நிற்பதை நாம் காணலாம்.

smart bikes

பிப்ரவரி 2019–ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில், சுமார் 33 கோடி ரூபாய் பட்ஜெட்டில், சென்னை முழுக்க கிட்டத்தட்ட 102 ஸ்மார்ட் பைக் ஸ்டேஷன்களை உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. Smart Bike Mobility என்ற செயலி மூலம் இதை சென்னைவாசிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் பல பலன்கள் (உடல்ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும்) கிடைக்கும் என்றாலும்கூட, சரியான பராமரிப்பு இல்லாததாலும் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் இன்றளவும் இது பல மெட்ரோ வாசலில் அப்படியே நிற்கிறது. நம் ஊரிலும் அரசு இதை விரிவுப்படுத்தி - விளம்பரப்படுத்தி - பராமரிப்பை அதிகப்படுத்தினால், நாமும் பயன்பெறலாம்...!