இந்தியா

இப்படியா கல்யாண ஆல்பம் எடுப்பீர்கள்? - படகிலிருந்து தவறி விழுந்த ஜோடி

இப்படியா கல்யாண ஆல்பம் எடுப்பீர்கள்? - படகிலிருந்து தவறி விழுந்த ஜோடி

rajakannan

கேரளாவில் ஆற்றுப் படகில் அமர்ந்து விதவிதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஜோடி, ஆற்றிலேயே தவறிவிழுந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

கேரளாவில் திருமண ஜோடி ஒன்று திருமணத்திற்கு முன்பாக புகைப்பட ஆல்பம் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக பம்பா நதியின் ஒரு பகுதியில் படகில் வைத்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். அது ஆழம் குறைவான ஆறு. படகில் அமர்ந்து கொண்டு ஒரு வாழை இலையை மேலே பிடித்தவாறு விதவிதமாக போஸ் கொடுத்துள்ளனர். 

இவ்வாறு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்த ஜோடி திடீரென ஆற்றில் தவறி விழுந்தது. அதாவது, இலையை தலைக்கு மேலே பிடித்துக் கொண்டே மாப்பிள்ளை, பெண்ணிற்கு முத்தம் கொடுப்பது போல் போஸ் கொடுக்க முயற்சித்தனர். படக்கினை சுற்றிலும் சிலர் நின்று கொண்டு ஜோடியின் மீது தண்ணீர் அள்ளித் தெளிக்கின்றனர். முத்தம் கொடுக்க முயன்ற நேரத்தில், பிடிமானத்தை இழந்துவிட்டதால், படகிலிருந்து அப்படியே சரிந்தனர். ஜோடி சரிந்த காட்சிகளை கேமராமேன் புகைப்படமாக எடுத்துவிட்டார். வீடியோவும் பதிவாகிவிட்டது.

இந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனை பலரும் பதிவிட்டு நகைச்சுவையாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் ஆபத்து அறியாமல் இப்படி செய்கிறார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். ஃபேஸ்புக்கில் இந்த வீடியோ பதிவிட்ட சில மணி நேரத்தில் 1.5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இந்த ஜோடிக்கு மே 6ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.